சிவகங்கை: சிவகங்கையில், காங்., – எம்.பி., கார்த்தி அளித்த பேட்டி: காங்கிரஸ் இருக்கும் அணியைத் தான் சிறுபான்மையினர் நம்புவர். நாம் எப்போதும் முஸ்லிம்களுக்கு ஆதரவானவர்கள். வங்கி கடன் தள்ளுபடிக்காக விதி உள்ளது. தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை, மாநில அரசு தள்ளுபடி செய்ய முடியாது. இலவசங்களில் நேரடி பண வினியோகம் செய்வதை வரவேற்கிறேன்.
போதை பொருட்கள் பரவல் என்பது நாடு முழுதுமுள்ள பிரச்னை. போதை பொருட்கள் வினியோகத்தை தடுக்க வேண்டும். போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மறுவாழ்வு மையங்கள் மூலம் விழிப்புணர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
காரைக்குடியில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஈரான் நாட்டில் நடந்த தாக்குதலில், அந்நாட்டின் தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அளித்த பேட்டியில், கமேனியை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது கருத்துக்கு முஸ்லிம் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். கூடவே, சிவகங்கை அரண்மனை பகுதியில் கார்த்திக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, நேற்று ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
