புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்: 1,200 ஆண்டுகள் பழமையான சோழர் காலக் கோயில்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் நந்தியின் மீது விழும் சூரிய ஒளி, நேராக சுவாமியின் திரு முகத்தில் விழும். அதேபோல் இங்கும் பங்குனி மாதம் சூரியனின் கிரணங்கள் நந்தியின் மீது விழுந்து பிறகு திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் மீதும் விழுவது அற்புதமாகும்.

திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்

சோழர்கள்காலக் கோயில்கள் தமிழகமெங்கும் காணப்படுகின்றன. காலம் கடந்து நிற்கும் அதன் கட்டடச் சிறப்பினை உலகமே வியந்துபோற்றுகின்றன.

வரலாற்றுப் பொக்கிஷங்களாகத் திகழும் இந்த ஆலயங்களுக்கு ஒருமுறை சென்று வந்தாலே நம் மனம் புத்துணர்ச்சி அடையும். அப்படிப்பட்ட ஓர் ஆலயம்தான் திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் திருக்கோயில்.

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திருக்கட்டளை கிராமம். இங்கு அருளும் மங்கள நாயகி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மிகப் பழைமையானது. இங்கு அருகிலேயே சுந்தரமாகாளி, சுந்தரவிநாயகர் என “சுந்தர’ என்னும் பெயரோடு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.

இங்கு வசிக்கும் மக்கள் பலரும் இந்தச் சோமசுந்தரேஸ்வரரின் பெயரையே தங்கள் குழந்தைகளுக்கு வைப்பது வழக்கமாக உள்ளது. ஆண் பிள்ளை என்றால் சோம சுந்தரம், சுந்தரம் என்றும் பெண் பிள்ளை என்றால், சுந்தரி, சுந்தராம்பாள் என்றும் பெயர்களை வைத்து அழைக்கின்றனர்.

திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்
திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்

திருக்கட்டளைக் கோயில் அற்புதமான கற்றளி. பாறைக்கற்களை மட்டுமே அடுக்கி இந்தக் கோயிலைக் திருக்கற்றளியாகக் கட்டியுள்ளனர். இது, ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டதற்கானச் சான்றுகள் உள்ளன என்கின்றனர், வரலாற்று ஆய்வாளர்கள்.

அதற்கான கல்வெட்டுகளும் இங்குக் காணப்படுகின்றன. விஜயநகரக் கல்வெட்டு இக்கோயிலில் உறையும் இறைவனை, ‘திருக்கட்டளை ஈஸ்வரம் உடைய நாயனார்’ எனக் குறிப்பிடுகிறது. இந்த ஆலயத்தின் விமானம் இருதள பிரம்மசாந்த விமான வகையைச் சேர்ந்தது.

முதலாம் குலோத்துங்கச் சோழன் இந்தக் கோயிலுக்கான முகப்பு மண்டபத்தை அமைத்ததாகவும் ஒரு கல்வெட்டுத் தகவல் சொல்கிறது. அர்த்த மண்டபத்திற்கு முன்னால் உள்ள முகமண்டபமும், கோயிலுக்கு வடக்குப் பக்கமுள்ள அம்மன் சந்நிதியும் காலத்தால் பிற்பட்டவையாம்.

கோயிலில் நுழைந்தவுடனே பெரியதும் சிறியதுமாக இரண்டு பலிபீடங்கள் உள்ளன. தொடர்ந்து நந்திதேவர். அர்த்த மண்டபமும் மகா மண்டபமும் கம்பீரமாகத் திகழ்கின்றன.

திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்
திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்

சுமார் 1,200 ஆண்டுகள் பழைமையான இக்கோயில் இன்றும் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. கருவறையில் சுந்தரேஸ்வரர் வீற்றிருக்க, வெளிப்பிராகாரத்தில் சூரியன், சப்தமாதாக்கள், விநாயகர், முருகன், ஜேஷ்டாதேவி, சந்திரன், சண்டிகேஸ் வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்குத் தனிச் சந்நிதிகள் உள்ளன.

கருவறையில் சோமசுந்தரேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார் ஈசன். கருவறை சதுர வடிவில் அமைந்திருக்கிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் நந்தியின் மீது விழும் சூரிய ஒளி, நேராக ஸ்வாமியின் திரு முகத்தில் விழும். அதெபோல் இங்கும் பங்குனி மாதம் சூரியனின் கிரணங்கள் நந்தியின் மீது விழுந்து பிறகு சுவாமியின் மீதும் விழுந்து வணங்கும் காட்சி அற்புதமாகும். அப்போது சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறும்.

இங்கு அருளும் மங்களநாயகி அம்பாளுக்கு மாங்கல்யம் நல்கும் மங்கள நாயகி என்றும் திருப்பெயர் உண்டு. திருமண வரம் அருளும் தேவி என்பதால் இந்தத் திருநாமம். திருமணம் முடித்த பெண்கள், இங்கு வந்து அம்பாள் சந்நிதி முன் நின்று அன்னையை வணங்கி, தங்களுடைய மாங்கல்யத்தின் மீது குங்குமம் வைத்து வேண்டிக்கொண்டால், மாங்கல்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம்.

எல்லோ கோயில்களிலும் திருக்கரங்களில் தாமரை ஏந்திய கோலத்தில் சூரியன் அருள் பாலிப்பார். இங்கே விசேஷமாக… இடது கை இடுப்பில் பொருந்தியிருக்க, வலது கையால் அபயம் காட்டியபடி அவர் அருள்வது சிறப்பு. எனவே இத்தலம் சூரிய பரிகாரத்தலமாகவும் திகழ்கிறது.

இங்கு அருளும் ஜேஷ்டாதேவியின் கைகளில் மாந்தியும் குளிகனும் குழந்தைகளாகத் திகழ்கிறார்கள். இந்தத் தேவியையும் அம்பாளையும் தரிசிப்பதால், திருமண வரம் கைகூடும், மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்
திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்

பெளர்ணமி தினத்தில் அம்பாளுக்கும் தேய்பிறை அஷ்டமியில் ஜேஷ்டாதேவிக்கும் பைரவருக்கும் அபிஷேகங்கள் நடக்கின்றன. நவராத்திரி, ஆடிவெள்ளிகளில் அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.

கருவறைக் கோஷ்ட மாடங்களில் தட்சிணா மூர்த்தி, வீராடன மூர்த்தி, பிட்சாடனமூர்த்தி ஆகிய மூவரையும் தரிசிக்கலாம். இப்படி இந்த மூவரும் அருளும் கோயில்கள் மிகவும் குறைவு!

திருக்கட்டளை ஆலயத்தில் அருளும் தட்சிணா மூர்த்தி, விசேஷ கோலத்தில் அருள்கிறார். திருக்கரத்தில் தண்டியுடன், வீணையையும் வைத்திருக்கிறார். `இசை ஞானம் கிடைக்க வழி செய்பவர் இந்த வீணாதட்சிணா மூர்த்தி’ என்கிறார்கள். அன்பர்கள் பலரும் இங்கு வந்து தங்களுக்கு இசைஞானம் வாய்க்கவும் பெருகவும் இந்தத் தட்சிணா மூர்த்தியை வழிபட்டுச் செல்கின்றனர்.

ஆருத்ரா தரிசனம், பிரதோஷம், மகா சிவராத்திரி ஆகிய விழாக்கள் இந்தக் கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மிகவும் பழைமையான இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இன்றைக்கும் பொலிவு குறையாத வண்ணம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எப்படிச் செல்வது: புதுக்கோட்டையிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருக்கட்டளை திருக்கோயில். புதுக்கோட்டையிலிருந்து ஆட்டோ அல்லது வாடகைக்கார் மூலம் இந்த ஆலயத்துக்குச் சென்று வரலாம்.

Source link