சென்னை: அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு, ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., சார்பில், தம்பிதுரை மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,யாகிறார்.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைந்து, அன்புமணி தலைமையிலான பா.ம.க., இந்த தேர்தலை சந்திக்கிறது. கூட்டணி உடன்படிக்கைபடி, ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உறுதி அளித்து இருந்தார்.
இது தொடர்பாக, பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘அ.தி.மு.க., ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவில், கூட்டணியில் உள்ள பா.ம.க.,வுக்கு, ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படுகிறது.
‘அதேபோல், அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை தேர்வு செய்யப்பட்டு உள்ளார்’ என, கூறப்பட்டுள்ளது.
பா.ம.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அன்புமணி அல்லது அவரது மனைவி சவுமியா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
