டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், உயிரிழந்த ஆட்சியாளர் கமேனியின் இறுதிச்சடங்குகளை ஒத்திவைப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
கமேனி கொல்லப்பட்ட பிறகும், ஈரான் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவத் தளங்கள் மற்றும் ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் மீது 250க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசித் தாக்கின.
இதுவரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் 17 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு, 2000 இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இன்னும் சில நாட்களில் ஈரானின் வான்பரப்பு முழுமையாக அமெரிக்க-இஸ்ரேல் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
மற்றொருபுறம், ஈரானும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. அதேவேளையில், கமேனி கொல்லப்பட்ட பிறகு, ஈரானின் உச்ச தலைவராக அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், டெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி முசல்லாவில் நேற்றிரவு முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 3 நாள் நடக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்க ஏராளமான மக்கள் அனுமதி கேட்டுள்ளனர்.
ஆனால், ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகளை தயார் செய்த பிறகு, இறுதிச்சடங்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
