திமுக – காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை நேற்று (மார்ச்.5) முடித்துவிட்டு முதல்வர் கிளம்புகையில் ‘ஒரு வழியா முடிஞ்சிருச்சு’ என சைகையில் கூறி சிரித்துவிட்டு சென்றார். இது இணையத்தில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் சகோதரி மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் அந்த சைகை குறித்து பேசியிருக்கிறார்.
“இந்த மண விழாவுக்கு நான் எந்த சூழலில் நான் வந்திருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும்.

நேற்றிரவு வரை கூட்டணி கட்சியோடு பேசி ஒரு ஒப்பந்தத்தை முடித்துவிட்டு தான், அதுவும் வெற்றிகரமாக முடித்துவிட்டுதான் எல்லோரும் பாராட்டக்கூடிய வகையில் முடித்துவிட்டு தான் வந்திருக்கிறேன்.
நீங்கள் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கலாம். ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரிலே ஏறுகிறபோது கையை எடுத்து ஒரு சைகை செய்திருப்பேன். அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை.
ஏதோ காரில் ஏறுகிறபோது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் எல்லாம் முடிந்துவிட்டதா? என்று கேட்டார்கள். முடிந்துவிட்டது என்று சொன்னேன் அவ்வளவு தான். அது இன்று வைரலாகி இருக்கிறது.
மகிழ்ச்சியோடு தான் இங்கு வந்திருக்கிறேன். இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு ராஜ்ய சபாவிற்கு இரண்டு வேட்பாளர்களை அனுப்ப இருக்கிறோம்.

கூட்டணி கட்சிகளுக்கு இரண்டு இடங்களைக் கொடுத்திருக்கிறோம். அந்த வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அதனால் நான் இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு செல்ல வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
