`ஊர் திருச்சி; 4 மாநிலங்களுக்கு பொறுப்பு' – காங்கிரஸ் ராஜ்ய சபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் பின்னணி

தமிழகத்தில் உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு வரும் மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் தி.மு.க 4 மாநிலங்களவை எம்.பி-க்களையும், அ.தி.மு.க 2 எம்.பிக்களையும் தேர்ந்தெடுக்க முடியும்.

அந்த வகையில், தி.மு.க-க்கு மொத்தமுள்ள 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களில், தே.மு.தி.க-வுக்கு 1 இடமும், காங்கிரஸூக்கு ஒரு இடமும் வழங்கியுள்ளது. தி.மு.க-வில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தே.மு.தி.க சார்பில் பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசர், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், ராஜ்யசபா எம்.பி பதவியைப் பெற முயற்சித்து வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் அதிக அறிமுகம் இல்லாத கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது, பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர் கிறிஸ்டோபர் திலக். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவராக உள்ளார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மகன். பொறியாளர். வெளிநாடுகளில் ஆடை வடிவமைப்பு நிறுவனங்களின் தலைமை பொறுப்பை உதறிவிட்டு, இளைஞர் காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வந்தார். 

தற்போது மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக (In-charge Secretary) இருந்து, அங்குள்ள அரசியல் மற்றும் நிர்வாகப் பணிகளை கவனித்து வருகிறார். இவர், ராகுல் காந்தியின் நேரடி தேர்வு என்று சொல்லப்படுகிறது.

இதனால், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவியை பெற கடுமையாக முயற்சித்து வந்த காங்கிரஸ் முக்கிய புள்ளிகள் பலரும் அப்செட் ஆகியுள்ளனர்.

Loading…

Source link