மஸ்கட்: ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த டேங்கர் கப்பலில் ஈரான் நடத்திய தாக்குதலில், மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சவுதி அரேபியா, யுஏஇ, கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும், எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது. இந்த வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அந்த வகையில், கடந்த மார்ச் 1ம் தேதி ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையே உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில், சென்று கொண்டிருந்த டேங்கர் கப்பல் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரோன் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில், 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும், கேப்டன் அஷிஷ்குமார் உள்பட இரு இந்தியர்கள் காணாமல் போகினர்.
இந்த நிலையில், காணாமல் போன அஷிஷ்குமார் உள்பட இருவரும் தற்போது உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழலால், இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உதவி எண்களும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
