நாங்குநேரியை தொடர்ந்து இடைக்காட்டூர் பட்டியலினத்தவர்கள் மீது கொடூர தாக்குதல்

மானாமதுரை :இடைக்காட்டூரில், 3 டூ வீலர்களில் வந்த, 9 பேர் பட்டியலினத்தவர் மீது தாக்குதல் நடத்தியதில், 3 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில், 9 பேர் மீது வழக்கு பதிந்து, 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூரில் மார்ச் 3 மதியம், 3:00 மணிக்கு செட்டிகுளம் பாண்டியராஜ், 41, வி.புதுக்குளம் மகேஷ், 42, இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த பட்டியலினத்தை சேர்ந்த இடைக்காட்டூர் ராஜூ, 42, ‘இங்கு ஏன் சண்டை போடுகிறீர்கள்?’ எனக்கூறி, அவர்களை விலக்கிவிட்டார்.

அன்று இரவு, 8:00 மணிக்கு மகேஷ், 3 டூ வீலர்களில் நண்பர்களுடன், தன் தாய் மாமா வீட்டில் இருந்த பாண்டியராஜை தேடி வந்தார். அங்கு அவர் இல்லாததால், அப்பகுதியிலிருந்த ராஜூவிடம், ‘நீ தானே என்னை கண்டித்தாய்?’ எனக்கேட்டு, அவரை தாக்கினார்.

இதை தடுக்க வந்த ராஜூவின் சகோதரர் ராஜேந்திரன், 45, உறவினர் தினேஷ், 29, ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கியது. அங்கிருந்து செட்டிக்குளம் சென்ற கும்பல், பாண்டியராஜ் வீட்டில் பொருட்களை அடித்து சேதப்படுத்தியது.

இதில், காயமுற்ற 3 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மார்ச் 4 அதிகாலை, 4:00 மணிக்கு சிப்காட் போலீசார் மகேஷ் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பட்டியலின மக்களை தாக்கியவர்களை கைது செய்யவில்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.அதற்கு பின்னரும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், தாக்குதலை வீடியோ ஆதாரங்களுடன் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அதைப்பார்த்து, ‘தி.மு.க., ஆட்சியில் பட்டியலினத்தவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து, சிப்காட் போலீசார், மகேஷ் உட்பட 9 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்தனர்.

சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத் கூறுகையில், ”இச்சம்பவத்தில் ஈடுபட்ட வி.புதுக்குளம் இருளப்பன், பாலமுருகன், வேல்முருகன், வேம்பத்துார் பாரதி மற்றும் ஒரு சிறுவன் என, ஐந்து பேரை கைது செய்துள்ளோம். தலைமறைவான மகேஷ் உட்பட நால்வரை விரைவில் கைது செய்வோம்,” என்றார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source link