'சீமான் பேச்சை காப்பியடித்து பேசும் விஜய்': நா.த.க.,வினர் கிண்டல்

தஞ்சாவூர்: சீமான் பேசியதை காப்பியடித்து, த.வெ.க., தலைவர் விஜய் பேசுவதாக, சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் கிண்டல் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூரில் நேற்று முன்தினம், த.வெ.க., நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்று பேசினார்.

அப்போது, விவசாயிகள் பற்றி மிகவும் பெருமிதத்துடன் பேசிய விஜய், ”ஒரு டாக்டர் இருக்காருன்னா, நமக்கு ஏதாவது உடம்பு சரியில்லன்னா அவர் ஞாபகம் வரும். அது மாதிரி, ஒரு பிரச்னைன்னா, வக்கீல தேடிப்போவோம். ஆனால், நாம சாப்பிடும்போதுகூட நம்மை அறியாமல் ஒருவரை நினைத்து நன்றி சொல்வோம்.

”மதிப்பிற்குரிய அந்த மனிதர், விவசாயி… விவசாயி… விவசாயி. இந்த உலகத்தையும் மனிதர்களையும் படைத்தது கடவுள்னு சொல்வாங்க. அந்த கடவுளுக்கே படையல் போடும் உயர்ந்த மனிதர்கள், விவசாயிகள். அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்,” என்றார்.

விஜயின் இந்த பேச்சு, அப்படியே, ‘மூன்று ஆண்டுகளுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது’ என நா.த.க.,வினர் கூறுகின்றனர். யு டியூப் சேனல் ஒன்றில், கடைசி விவசாயி திரைப்பட விருது விழாவில், சீமான் பேசியதையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அந்த விழாவில் சீமான், ‘ஒரு மனிதன் தன் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் வழக்கறிஞரை சந்திக்கிறான். என்றாவது ஒரு நாள் பொறியாளரை சந்திக்கிறான். என்றாவது ஒரு நாள் மருத்துவரை சந்திக்கிறான். ஆனால், ஒரு நாளைக்கு மூணு வேளையும் விவசாயியை சந்திக்கிறான்.

‘உலகில் எல்லாரும், மனிதர்கள் செய்யும் தொழிலை செய்கின்றனர். ‘விவசாயிகள் மட்டும் தான் தெய்வத்தின் தொழிலை செய்கின்றனர். உழவு இல்லை என்றால் உணவு இல்லை, உணவு இல்லை என்றால் உயிர்கள் இல்லை, உயிர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை’ என பேசியிருந்தார்.

இதை சமூக வலைதளங்களில் நா.த.க.,வினர் பரப்பி வருவதால், இரு கட்சியினரும் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link