பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் சிசுவை குப்பையில் வீசிச்சென்ற கல்லூரி மாணவியின் செயல், தருமபுரியில் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த மாணவி மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாகலஹள்ளியில் நேற்று முன் தினம் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை யாரோ வீசிச்செல்ல இதை அப்பகுதியிலுள்ள மக்கள் பார்த்து சிசுவை மீட்டு பாளையம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மருத்துவர்களின் முதலுதவி சிகிச்சைக்குப்பின் அந்தச் சிசுவை தொட்டில் குழந்தைகள் மையத்தில் ஒப்படைத்தனர். பின்பு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரின் புகாரின் அடிப்படையில் தொப்பூர் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

விசாரணையில் திருமணம் ஆகாத கல்லூரி மாணவி ஒருவர் கர்ப்பமான நிலையில் குழந்தையைப் பெற்று யாருக்கும் தெரியாமல் வீசிச்சென்றது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அந்தக் கல்லூரி மாணவி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
