வாஷிங்டன்: ஈரானுடன் நடந்து வரும் போர் காரணமாக, எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க, ரஷ்யாவிடம் இருந்து கச்சா

வாஷிங்டன்: ஈரானுடன் நடந்து வரும் போர் காரணமாக, எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பொருட்களை இந்தியா கொள்முதல் செய்யலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தும் போர் 7வது நாளாக நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்தப் போர் காரணமாக, எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளதால், பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் தேவையான எரிபொருள் இருப்பில் உள்ளதாகவும், தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போர் பதற்றம் நிலவும் நாடுகளைத் தவிர்த்து, பிற நாடுகளிடம் இருந்தும் எண்ணெய் கொள்முதல் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. அதேவேளையில், ரஷ்யாவும் இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை வழங்க முன்வந்தது. ஆனால், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்த நிலையில், ஈரானுடன் நடந்து வரும் போர் காரணமாக, எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பொருட்களை, அடுத்த 30 நாட்களுக்கு இந்தியா கொள்முதல் செய்யலாம் என்று அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்; அதிபர் டிரம்பின் எரிசக்தி கொள்கையினால் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு 30 நாட்கள் தற்காலிக விலக்கை நிதித்துறை வழங்குகிறது. இந்த குறுகிய கால நடவடிக்கை ரஷ்யாவுக்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மைகளை வழங்காது. இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி. அமெரிக்க எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரிக்கும் என்று நம்புகிறோம். அதேவேளையில், உலகளவில் எரிசக்தி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, தனக்கு சாதகமான சூழலை உருவாக்கும் ஈரானின் முயற்சிக்கு இந்த நடவடிக்கை முற்றுப்புள்ளி வைக்கும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Source link