எப்ஸ்டீன் ஆவணம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது 5 வில்லங்க குற்றச்சாட்டுகள்

வாஷிங்டன் : அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட சமீபத்திய எப்ஸ்டீன் கோப்புகளில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் ஒருவர் சுமத்திய உறுதிப்படுத்தப்படாத ஐந்து குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு ஆவணங்கள், அமெரிக்க அரசு மற்றும் அந்நாட்டு நீதித்துறையின் உத்தரவுப்படி, சில ஆண்டுகளாக வெளியிடப்படுகின்றன. இதில் உலகின் முக்கிய நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான புகார்களை நீதித் துறை மறைத்து வைத்திருப்பதாக அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். சமீபத்தில், அதிபர் டிரம்ப் மீது பெண் ஒருவர் சுமத்திய உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் வெளியானது.

எப்.பி.ஐ., ஆவணங்களின்படி, அடையாளம் தெரியாத பெண் ஒருவர், 1983ல், தனக்கு 13 வயது இருக்கும் போது, தன்னை டிரம்பிற்கு எப்ஸ்டீன் அறிமுகப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அப்போது, டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகவும், தற்காப்புக்காக அவரை கடித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆத்திரமடைந்த டிரம்ப், தன்னை அடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு குற்றச்சாட்டில், டிரம்பும், எப்ஸ்டீனும் நிதி முறைகேடு குறித்து பேசியதை தான் கேட்டதாக தெரிவித்துள்ளார். எப்ஸ்டீன் மற்றவர்களை மிரட்டி பணம் பறிக்க பயன்படுத்திய ரகசியங்கள் மற்றும் புகைப்படங்கள் குறித்து டிரம்பிற்கு தெரியும் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

அடுத்ததாக, தெற்கு கரோலினாவில் உள்ள ஹில்டன் ஹெட் என்ற இடத்தில், எப்ஸ்டீன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லை.

எப்ஸ்டீனின், 50வது பிறந்த நாளுக்காக டிரம்ப் அனுப்பியதாக கூறப்படும் ஒரு கடிதத்தில், ஒரு பெண்ணின் நிர்வாண ஓவியம் வரையப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்.

Source link