சென்னை: விஜய் வந்த பிறகு தான், திமுக கூட்டணி உருவானது என சொல்வது அரசியல் அறியாமை, உளறல் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னை திருமங்கலத்தில் அவர் அளித்த பேட்டி:
விஜய் மீது உள்ள பயத்தால், அதிக கூட்டணி கட்சிகளை திமுக சேர்த்துள்ளது என்று கூறுபவர்கள் தான், பதற்றத்தில், பயத்திலும் உள்ளனர். திமுக கூட்டணியானது, விஜய் கட்சி துவங்கும் முன்பே உருவான ‘மெகா’ கூட்டணி. இதில், ஒரு சில கட்சிகள் மட்டுமே புதிதாக சேர்ந்துள்ளன.
விஜய் வந்த பின், திமுக கூட்டணி உருவானது என்பது அரசியல் அறியாமை, உளறல்; அதில் எந்த பொருளும் இல்லை. வெளிப்படையாகவே, கூட்டணி ஆட்சிக்கு தயார் என விஜய் அறிவித்தும் கூட, அதிமுகவில் இருந்து வெளியேறும் கட்சிகளோ, திமுகவை எதிர்க்கும் கட்சிகளோ அவருடன் சேரவில்லை.
அதை மூடி மறைப்பதற்கு, இப்படிப்பட்ட கருத்தை திட்டமிட்டு பரப்புகின்றனர். விஜயின், திருமணத்தை மீறிய உறவு தொடர்பான தனிப்பட்ட விவகாரம் குறித்து, நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
பீஹாரில், நன்மதிப்புடைய நிதிஷ்குமார், பாஜவுடன் சேர்ந்த பின், நன்மதிப்பு குறைந்தது. தற்போது, முதல்வர் பொறுப்பில் இருந்து விலகி, ராஜ்யசபா எம்பி என்ற நிலையை பாஜ உருவாக்கியுள்ளது.
இதேநிலை, அதிமுகவுக்கு வந்து விடக்கூடாது என்பதை தான் தொடக்கத்தில் இருந்தே நான் சுட்டிக்காட்டுகிறேன். போகப்போக அவர்களும் பாஜவை புரிந்து கொள்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.
