வாஷிங்டன் : ”ஈரான் போரை முழுமையாக முடித்த பின், கியூபா மீது கவனம் செலுத்தப்படும்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்க நாடான கியூபாவில் உள்ள கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடைகளை கடுமையாக்கி வருகிறது. எரிபொருள் ஏற்றுமதி தடை காரணமாக அந்நாட்டில் பெரும் மின்வெட்டு நிலவுகிறது. வெள்ளை மாளிகையில், ‘மேஜர் லீக் சாக்கர் – 2025’ சாம்பியன்களான இன்டர் மியாமி சி.எப்., அணியைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி உள்ளிட்டோரை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார். இதில் கியூப வம்சாவளியினர் பங்கேற்றனர்.
அப்போது, அதிபர் டிரம்பிடம் ஈரான் போர் மற்றும் அடுத்த கட்ட நகர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பதிலளித்த டிரம்ப், ”போரில் அமெரிக்கா – இஸ்ரேல் படைகள் வேகமாக முன்னேறி வருகின்றன. ஈரானின் ராணுவ திறன்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
”அவர்களுக்கு விமானப்படை இல்லை. விமானத் தற்காப்பு இல்லை. கடற்படை முற்றிலும் அழிக்கப்பட்டது. மூன்று நாட்களில் மட்டும், 24 கப்பல்களை அழித்துள்ளோம். ஈரானிய தலைவர்கள் இப்போது பேச்சுக்கு அழைக்கின்றனர். எப்படி ஒப்பந்தம் செய்வது என்று கேட்கின்றனர். ஆனால், நாங்கள் சண்டையிடவே விரும்புகிறோம்,” என்றார்.
மேலும், ”ஈரான் போரை முதலில் முடிக்க வேண்டும். அதன்பின் கியூபாவை பார்த்துக் கொள்வோம். பல அற்புதமான மக்கள் அந்நாட்டுக்கு திரும்பி செல்லும் நிலை வரும்,” என்றும் அதிபர் டிரம்ப் கூறினார். இதனால், அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் கியூபா மக்கள் உள்ளனர்.
குர்து படையினர் ஈரானை தாக்க டிரம்ப் ஆதரவு
வடக்கு ஈராக்கில் உள்ள ஆயிரக்கணக்கான குர்து படையினர் ஈரானுக்குள் நுழைய தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். இதற்காக அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்த்து உள்ளனர். அதிபர் டிரம்ப் மற்றும் ஈராக்கின் முக்கிய குர்து கட்சி தலைவர்களிடையே இது தொடர்பாக ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ”ஈராக் எல்லை வழியாக ஈரானுக்குள் நுழைந்து அந்நாட்டு பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நடத்த குர்து படைகள் முன்வந்தால், அதற்கு முழு ஆதரவு அளிப்பேன்,” என்றார்.
