புதுடில்லி: இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்கா தனது தேசிய நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கும் என்றும், 20 ஆண்டுகளுக்கு முன் சீனாவிடம் செய்த தவறுகளை மீண்டும் செய்யாது என்றும், அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கிறிஸ்டோபர் லாண்டோ தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெறும் ‘ரெய்சினா’ மாநாட்டில் அவர் பேசியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சீனாவுக்கு சந்தையை திறந்து விட்டது மிகப்பெரிய தவறு.
இந்த தவறை அமெரிக்கா மீண்டும் செய்யாது என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். சீனாவை போல, இந்தியாவை போட்டியாளராக மாற வரவிடமாட்டோம். எந்தவொரு ஒப்பந்தமும் அமெரிக்க மக்களின் நலனை முதன்மையாக கொண்டே மேற்கொள்ளப்படும்.
இரு நாட்டு அரசுகளும், சொந்த நாட்டு மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவை. ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்பது அமெரிக்கா தனித்து செயல்படும் என்பதல்ல. அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்படுவதன் வாயிலாக தான் எங்களது நோக்கத்தை அடைய முடியும்.
தேசிய நலன் என்பது அனைத்து நாடுகளின் பொதுவான கொள்கை என்று நாங்கள் நினைக்கிறோம்.
அதிபர் டிரம்ப் எங்கள் நாட்டை, மீண்டும் வலிமைப்படுத்த நினைப்பது போலவே, இந்திய பிரதமரும் நாட்டை வளர்ச்சியடைந்ததாக மாற்ற எண்ணுவார் என்பதை அமெரிக்கா மதிக்கிறது. வர்த்தக ஒப்பந்தத்தை பொறுத்தவரை, விவாதங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
