'செலவு செய்வோரை வேட்பாளர் ஆக்குங்கள்': கிரீஷ் ஷோடங்கரிடம் வலியுறுத்திய ஸ்டாலின்

– நமது நிருபர் –

தி.மு.க., – காங்., கூட்டணி உறுதியாகி விட்டாலும், கூட்டணியை இறுதி செய்வதற்கு முன், இரு கட்சிகளின் குழுவினர் பேசும்போது தேர்தல் நிதி தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இது, காங்கிரசின் தொகுதி பங்கீட்டு குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்ததாக அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர்.

நம்பிக்கை

இதுகுறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரஸ், ஒவ்வொரு தேர்தலுக்கும் தொகுதி பங்கீடு வாயிலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதிகளை பெற்றாலும், அக்கட்சியின் தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு தேவையான தேர்தல் செலவுகளை தி.மு.க., செய்வது வாடிக்கை.

ஒரு காலத்தில் லட்சங்களில் செலவு செய்து வந்தவர்கள், கடந்த சில தேர்தல்களாக கோடிகளிலும் செலவு செய்கின்றனர்.

அந்த வகையில், ‘வரும் சட்டசபைத் தேர்தலுக்கும் தங்கள் வேட்பாளர்களுக்காக, தி.மு.க.,வே செலவு செய்யும்’ என காங்கிரசார் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால், கடைசி நேரத்தில் தொகுதி எண்ணிக்கையில் காங்கிரஸ் காட்டிய கறார், தி.மு.க.,வி னருக்கு பிடிக்கவில்லை.

அதனால், கடந்த தேர்தல்களைப் போல, இம்முறை தி.மு.க., தாராளமாக பணத்தை செலவு செய்யுமா என தெரியவில்லை.

காங்., தரப்பிலான தேர்தல் குழுவினரிடம் பேசும்போது, ‘தி.மு.க., தரப்பில், கடந்த தேர்தலை போல நிறைய செலவு செய்ய முடியாது.

தொகுதி பங்கீடு

‘ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். அதனால், காங்., தரப்பில் ‘பசை’ உள்ளோரை தேர்வு செய்து வேட்பாளர்களாக நிறுத்துங்கள்’ எ ன, முதல்வர் ஸ்டாலி ன் சொல்லி உள்ளார்.

அதிர்ச்சியடைந்த காங்., தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், ‘தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு நடக்கும்போது ஏற்பட்ட கசப்புக்கும், இரு கட்சிகளுக்குமான உறவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதற்காக, இம்முறை காங்., வேட்பாளருக்கு நிதியை குறைப்போம் என சொல்லக் கூடாது.

‘தற்போது, காங்., தரப்பில் தமிழகத்தில் எம்.எல்.ஏ.,க்களாக இருப்போரில் பெரும்பாலானோருக்கு ‘சீட்’ வழங்கப்படும்.

‘செலவாகும் தொகையில், 20 சதவீதம் அளவுக்கே அவர்களால் ஈடுசெய்ய முடியும். மற்றதை வழக்கம்போல தி.மு.க.,வே செய்ய வேண்டும்’ என சொல்லி இருக்கிறார்.

இதைக் கேட்டதும் முதல்வர் ஸ்டாலின், ‘செலவுத் தொகையைக்கூட பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆனால், தொகுதியில் செல்வாக்கு உள்ள, வெற்றி பெறக்கூடிய கட்சிக்காரர்களை மட்டும் வேட்பாளராக்குங்கள். தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிடக் கூடியவர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்றா க வேண்டும்.

பலவீனம்

‘அது ரொம்ப ரொம்ப முக்கியம். வெற்றியைத் தொடக் கூடியவர்களை வேட்பாளர்கள் ஆக்காமல், பலவீனமானவர்களை நிறுத்தினால் ஏற்படும் ஒவ்வொரு தோல்வியும், எதிர்க்கட்சியினருக்கு பலத்தை கூட்டிவிடும்.

‘அதனால், தகுதியானவர்களை வேட்பாளர்களாக அறிவியுங்கள்’ என கூறியுள்ளார். இதை கட்சி மேலிடத்தில் தெரிவிப்பதாக கிரீஷ் ஷோடங்கர் சொல்லி இருக்கிறார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

Source link