வாஷிங்டன்: அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் தனது ராணுவம், கடற்படை மற்றும் முக்கிய தலைவர்களை இழந்து விட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; ஈரானில் நாம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். அமெரிக்க படைகளின் செயல்பாட்டிற்கு 10க்கு எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள் என்று கேட்கின்றனர். நான் 12 முதல் 15 மதிப்பெண்கள் கொடுப்பேன். ஈரானின் ராணுவம், கடற்படை அழிக்கப்பட்டு விட்டது.
அவர்களின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. முக்கிய தலைவர்களையும் இழந்து விட்டார்கள். அவர்களின் விமானப்படை முற்றிலும் துடைத்தெறியப்பட்டுவிட்டது. அவர்களிடம் 32 கப்பல்கள் இருந்தன. அவை அனைத்தும் தற்போது கடலுக்கு அடியில் உள்ளன.
ஈரானில் இருந்த தலைவர்கள் மிகவும் மோசமானவர்கள். அவர்கள் அமெரிக்க மக்கள் பலரைக் கொன்று வந்தனர். நமது மக்கள் வெடிகுண்டுகளால் உடல் உறுப்புகளை இழந்து, முகம் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். நம்மிடம் இரு வழிகள் இருந்தன. இதைப் பொறுத்துக்கொண்டு அப்படியே தொடரலாம் அல்லது ஈரானின் இந்த செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்.
தற்போது, நாம் ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். வெனிசுலாவில் நடந்த முந்தைய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்பாடுகளைப் பார்த்து மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு முன்னெப்போதும் இல்லாத மதிப்பு தற்போது கிடைத்து வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.
