சென்னை: ‘பாதச்சுவடு தெரியாமல் நாட்டை விட்டு காங்கிரஸ் அழியப்போவது உறுதி’ என, அ.தி.மு.க., கடுமையாக விமர்சித்து உள்ளது.
அ.தி.மு.க., வெளியிட்டுள்ள பதிவு:
மட்கிப் போன காங்கிரசுக்கு, கொள்கைக் கூட்டணி என்றால் என்னவென்று தெரியுமா? லோக்சபாவில் காங்., — எம்.பி.,க்கள் ‘சஸ்பெண்ட்’ ஆனபோது, கமுக்கமாக இருந்து சீட்டை காப்பாற்றிக் கொள்வதும், இந்திரா பெயரை நீக்கி விட்டு கருணாநிதி பெயர் வைத்தால் கூட, வெட்கமே இல்லாமல் அமைதி யாக இருப்பதும் தான் கொள்கை கூட்டணியா?
முன்னாள் பிரதமர் இந்திராவை தி.மு.க.,வினர் தாக்கி, அவர் தலையில் இருந்து வடிந்த ரத்தத்தை, கருணாநிதி என்னவென்று சொன்னார் என்பதை தமிழக காங்., தலைவர் சொல்வாரா? கருணாநிதியின் விஞ்ஞான ஊழல்களை, உலகிற்கே எடுத்து சொன்ன சர்காரியா கமிஷனை அமைத்தது யார் என்பதை தி.மு.க., சொல்லுமா?
த.வெ.க.,வை காட்டி பேரம் பேசுவது தான் காங்கிரசின் கொள்கை என்பது மக்களுக்கு இப்போது புரிந்துள்ளது. மூன்று மாதங்களாக, அறிவாலயத்தைப் பார்த்து சத்தியமூர்த்தி பவனும், சத்தியமூர்த்தி பவனை பார்த்து அறிவாலயமும் மாறி மாறி காறித் துப்பிக் கொண்டதை, ஒரே இரவில் துடைத்து விட்டீர்களா?
காமராஜரை, அவர் வாழும் வரை கேவலமாக சித்தரித்து இழிவுபடுத்தியவர் கருணாநிதி. காமராஜர் மறைந்த பிறகும், சென்னை மெரினாவில் இடம் தர மறுத்து அசிங்கப்படுத்திய கருணாநிதியின் வரலாறு காங்கிரசுக்கு மறந்து விட்டதா?
தி.மு.க.,வுடன் சேர்ந்து செய்த ஈழப் படுகொலை உள்ளிட்ட அத்தனை பாவங்களுக்குமான சம்பளமாக, 2014ல் இருந்து அதல பாதாளத்தை நோக்கி, ‘100 தோல்வி காங்கிரஸ்’ என்று நாடே கைகொட்டி சிரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலினிடம், கேவலம் மூன்று சீட்டுக்கு கெஞ்ச வேண்டிய இடத்திற்கு போன பிறகும், காங்., பண்ணையார்களுக்கு திமிர் அடங்கவில்லை.
பாதச்சுவடு தெரியாமல், நாட்டை விட்டு காங்கிரஸ் அழிந்து ஒழியப் போவது உறுதி. காமராஜர் காலத்தில் தான், காங்கிரஸ் பேரியக்கம்; இப்போது, வெறும் அறிவாலய குப்பை தொட்டி தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
