நியூயார்க்: அமெரிக்கா நடத்தி வரும் போரை நிறுத்தும் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் மவுனம் காப்பதாக ஈரான் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஐநா சபைக்கா ஈரானின் நிரந்தரப் பிரதிநிதி அமீர் சயீத் இராவானி கூறியதாவது; அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. அவர்கள் வேண்டுமென்றே பொதுமக்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புகளை இலக்காக வைத்து கண்மூடித்தனமாகத் தாக்குகின்றனர். அதிக மக்கள் வசிக்கக்கூடிய நகரங்கள் மற்றும் முக்கியமான பொது உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படுகின்றன. அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில் 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.
அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தி கொன்று குவிக்கின்றனர். அதிகபட்ச அழிவையும், துயரத்தையும் ஏற்படுத்துவதுமே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்குவதாக அவர்கள் கூறுவது பொய்யானது, ஆதாரமற்றது.
இந்தப் போரை உடனடியாக நிறுத்துமாறு பலமுறை வலியுறுத்திய போதும், ஐநா பாதுகாப்பு பாதுகாப்பு கவுன்சில் மவுனம் காத்து வருகிறது. இதுவரையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,332 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விமான நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் பிற பொது உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்தப் போரில் இதுவரை நாடு முழுவதும் 180க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் சேதமடைந்துள்ளன, 13 சுகாதார நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன, இவ்வாறு கூறியுள்ளார்.
