அமெரிக்காவுக்கு எதிரான போர்; ஈரானுக்கு ரகசிய தகவல்களை வழங்கியது ரஷ்யா

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஈரானுக்கு ரஷ்யா ரகசிய தகவல்களை வழங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போர் 8வது எட்டியுள்ள நிலையில், நாளுக்கு நாள் தாக்குதல் தீவிரம் அடைந்து வருகிறது. மேற்காசியாவில் ஏற்பட்ட இந்த மோதல், தற்போது வளைகுடா நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது.

இதனிடையே, போரை நிறுத்தி மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றத்தை குறைக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வந்த நிலையில், ரஷ்ய அதிபர் புடின் நேற்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கமேனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

இந்த நிலையில், அமெரிக்க ராணுவ இலக்குகளைத் தாக்குவதற்கு உதவக்கூடிய முக்கிய ரகசியத் தகவல்களை ஈரானுக்கு ரஷ்யா வழங்கியுள்ளதாக உளவுத்துறை தகவல் வெளியாகியுள்ளன. அதாவது, ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள், விமானங்களைக் கண்காணிக்கவும், தாக்கவும், இந்தத் தகவல்கள் ஈரானுக்கு உதவும் என்று பிரபல செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் நடந்து வரும் இந்தப் போரில், முதல்முறையாக ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. ஏற்கனவே, உக்ரைனுக்கு எதிரான போரில், ஈரானின் டிரோன்களை ரஷ்யா பயன்படுத்தியாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன. இந்த சூழலில், ரகசிய தகவல்களை வழங்கியதன் மூலம் ஈரானுக்கு ரஷ்யா மறைமுகமாக உதவுவதாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் கூறுகையில், ‘யார் யாருடன் பேசுகிறார்கள் என்பது அமெரிக்க அதிபர் நன்கு அறிவார். இது போன்ற தேவையற்ற விஷயங்கள் வலுவாக எதிர்கொள்ளப்படும்,’ என்று தெரிவித்தார்.

Source link