போர் காரணமாக விலை உயர்வு… சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்னாச்சு? திமுகவை கேட்கிறார் அண்ணாமலை

சென்னை: பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, இப்போதாவது சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை அறிவிக்க வேண்டும் என்று பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

நாடு முழுவதும், கடந்த 10 ஆண்டுகளில், காஸ் பயன்பாடு, 45% அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி கொண்டு வந்த உஜ்வாலா இலவச காஸ் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களால், கடந்த 10 ஆண்டுகளில், காஸ் இணைப்பு, 14 கோடி வீடுகளில் இருந்து, சுமார் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து, 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் இன்று காஸ் இணைப்பு உள்ளது.

பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, காஸ் இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது. மொத்த பயன்பாட்டில், இறக்குமதி மட்டுமே 60% ஆக உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்படும்போது, நமது நாட்டிலும் விலை உயர்வு தவிர்க்கவியலாமல் போகிறது.

திமுக தனது கடந்த 2021ம் ஆண்டில் தேர்தல் வாக்குறுதி எண் 503ல், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் அதனை நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக, தற்போதாவது, சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் கூறினார்.

Source link