துபாய்: போர் பதற்றம் காரணமாக இன்று துபாய்க்கு வந்து சேரும் மற்றும் துபாயில் இருந்து புறப்படும் விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்த எமிரேட்ஸ் நிறுவனம், பிற்பகல் முதல் மீண்டும் சேவையை துவங்குவதாக அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போர் 8வது எட்டியுள்ள நிலையில், நாளுக்கு நாள் தாக்குதல் தீவிரம் அடைந்து வருகிறது. மேற்காசியாவில் ஏற்பட்ட இந்த மோதல், சவுதி அரேபியா, யுஏஇ, கத்தார், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது.
இந்த நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்களை குறி வைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இன்று காலையில் துபாயில் சில இலக்குகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. நல்வாய்ப்பாக விமான நிலையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், துபாயில் இருந்து புறப்படும் மற்றும் வந்து, சேரும் அனைத்து விமான சேவைகளும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்தது. மறு அறிவிப்பு வரும் வரை இதே நிலை தொடரும் என்றும் தெரிவித்திருந்தது.
அறிவிக்கப்பட்ட 40 நிமிடங்களுக்கு பிறகு, எமிரேட்ஸ் தனது விமான சேவைகளை மீண்டும் துவங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை; இன்று பிற்பகல் முதல் முன்பதிவு செய்த பயணிகள் விமான நிலையத்திற்கு வரலாம். துபாய் வழியாகப் பயணம் செய்யும் பயணிகள், அவர்களின் அடுத்த இணைப்பு விமானமும் இயக்கப்படும் பட்சத்தில் விமான நிலையத்திற்கு வரலாம். அதற்கு முன்பாக, விமானங்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ள வேண்டும்.
போர் பதற்ற சூழ்நிலையை எமிரேட்ஸ் நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப விமான செயல்பாடுகளின் அட்டவணை மாற்றியமைக்கப்படும். ஏனெனில், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக, பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, துபாய் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் சிறிது நேரம் ரத்து செய்யப்பட்டதாகவும், பின் மீண்டும் சேவை தொடங்கியுள்ளதாகவும் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
