நீலகிரி: தோட்ட தொழிலாளர் வம்சாவளி டு அரசு செலவில் மலேசியாவில் உயர்கல்வி! – அசத்தும் அரசு பள்ளி மாணவி

“அரசின் மாதிரி பள்ளியில் படிக்கிற போது வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வி படிப்பேன் என்று உறுதி கூறியிருந்தார் மாணவி பிரேமா” – தலைமை ஆசிரியர்.

மாணவி பிரேமா

தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் புளியம்பாறை பகுதியைச் சேர்ந்தவர், மாணவி பிரேமா. தோட்ட தொழிலாளர்களான பரமேஸ்வரி – கணேஷ் மூர்த்தி தம்பதியரின் மகளான இவர், தொடக்க கல்வி முதலே படிப்பில் அதீத நாட்டம் செலுத்தி வருகிறார். அருகில் உள்ள புளியம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 – ம் வகுப்பு வரை படித்த மாணவி பிரேமா, அரசு பொதுத் தேர்வில் 462 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவராக அசத்தியிருக்கிறார்.

மாணவி பிரேமா
மாணவி பிரேமா

இந்த மதிப்பெண் மூலம் குன்னூரில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் 11 மற்றும் 12- ம் வகுப்பு பயில தேர்வாகியிருக்கிறார். அங்கும் சிறப்பாக கல்வி பயின்ற மாணவி பிரேமா, தமிழ்நாடு அரசின் முழு உதவியுடன் வெளிநாட்டில் கல்வி பயிலும் சிறப்பு திட்டத்தில் தேர்வு எழுதியிருக்கிறார். அதில் தேர்ச்சி பெற்ற மாணவி பிரேமா, மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நான்கு வருட பொறியியல் கல்வி பயில தேர்வாகியிருக்கிறார். தேயிலை தோட்ட தொழிலாளர் வம்சாவளியைச் சேர்ந்த மாணவி பிரேமா, முதல் தலைமுறை `பட்டதாரி” ஆகப்போகும் பெருமிதத்துடன், பட்டப்படிப்பு உலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

மாணவி பிரேமா குறித்து நம்மிடம் பேசிய புளியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், “மாணவி பிரேமா பத்தாம் வகுப்பு படிக்கும்போதே பாடங்களை நன்கு புரிந்து படிக்கக்கூடிய திறன் பெற்றவர். ஆசிரியர்களிடம் உரிமையுடன் சந்தேகங்களைக் கேட்டு பாடங்களைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர். அரசின் மாதிரிப் பள்ளியில் படிக்கிற போது வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வி படிப்பேன் என்று உறுதி கூறியிருந்தார்.

மாணவி பிரேமா
மாணவி பிரேமா

தமிழ்நாடு அரசின் முழு செலவில் மலேசியாவில் உள்ள அல் புகாரி இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்காண்டு பொறியியல் படிப்பான தரவு அறிவியல் கல்வியை பயில இருக்கிறார். அயராத உழைப்பாலும் கல்வி மீதான அதீத ஈடுபாட்டாலும் இன்றைக்கு அதை சாத்தியமாக்கியிருக்கிறார். அரசு பள்ளியில் பயின்றால் எந்த உச்சத்தையும் அடையலாம் என்பதற்கு மாணவி பிரேமா நல்ல முன்னுதாரணம்” என்றார்.

வாழ்த்துகள் பிரேமா!!!

தேயிலை தோட்டத்துச் சிறு செடி, விருட்சமாகி வான் தொடட்டும்!

Source link