சென்னை; இறையாண்மை கொண்டவர்கள் இந்திய மக்கள், வெளிநாடுகளில் இருந்து உத்தரவுகளை பெறுபவர்கள் அல்ல என்று அமெரிக்க அதிபர் டிரம்பை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், எம்பியுமான கமல்ஹாசன் கண்டித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்கா மேலும் வலுவாக்கி வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் அமெரிக்கா கட்டுப்பாடுகளுடன் கூடிய விலக்கு அளித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. எந்தவொரு நாட்டின் அனுமதியையும் சார்ந்து இயங்கவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்பியுமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து உத்தரவுகளை பெறுபவர்கள் இந்திய மக்கள் அல்ல என்றும் தமது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது;
அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு, நாங்கள் இந்திய மக்கள். சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாட்டைச் சேர்ந்தவர்கள். எங்கோ தொலைதூரங்களில், வெளிநாட்டின் கரைகளில் இருந்து வரும் உத்தரவுகளை எப்போதுமே ஏற்பதில்லை.
எனவே, நீங்கள் உங்கள் வேலையை உங்களின் திறமைக்கு ஏற்றவாறு செய்யுங்கள். உலக அமைதிக்கான ஒரே அடித்தளம் என்பது இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர மரியாதை ஆகும்.
உங்களுக்கும், உங்கள் நாட்டு மக்களுக்கும் அமைதி, செழிப்பு கிடைக்க கமல்ஹாசன் என்கிற பெருமைமிகு இந்தியன் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு தமது பதிவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
