புதுடில்லி: இ-காமர்ஸ் நிறுவனமான மீஷோவுக்கு 1,500 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை சட்டப்படி எதிர்கொள்ள போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மீஷோ, பங்குச்சந்தைக்கு அளித்துள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
வருமான வரித்துறையிடம் இருந்து 2023 – -24 மதிப்பீட்டு ஆண்டுக்கான 1,499 கோடி ரூபாய் வரி பாக்கி நோட்டீஸ் வந்துள்ளது. இதில் வட்டியும் அடங்கும். வருமான வரிச்சட்டத்தின் பிரிவுகள் 143 (3), 156ன்படியான அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளில் மீஷோவுக்கு உடன்பாடு இல்லை.
எனவே, இந்த உத்தரவை நிறுவனம் சட்டப்படி எதிர்கொள்ளும். நிறுவனத்தின் நலன்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வருமான வரி நோட்டீசால் நிறுவனத்தின் நிதிநிலை, செயல்பாடுகள், இதர நடவடிக்கைகளில் பாதிப்பு இல்லை என்றும் மீஷோ தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 2022 – -23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரி பாக்கி நோட்டீசை வருமான வரித்துறை மீஷோவுக்கு அனுப்பியிருந்தது. இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், நோட்டீசுக்கு இடைக்கால தடை பெறப்பட்டு உள்ளது.
