'சர்வதேச மகளிர் தினத்தின் ஆணிவேர்' – கிளாரா ஜெட்கின் என்ற நெருப்புப் பெண்ணைப் பற்றித் தெரியுமா?

மார்ச் 8 என்றாலே பூக்களும், பரிசுகளும், ஷாப்பிங் ஆஃபர்களும், வாட்ஸ்அப் வாழ்த்துகளும் பகிரும் தினமாக மகளிர் தினம் மாறிவிட்டது. ஆனால், இந்த நாளின் பின்னணியில் பல தசாப்த காலப் போராட்டமும், ரத்தமும், வியர்வையும் அடங்கியிருக்கிறது. அந்தப் போராட்டத்தின் மிக முக்கிய முகம்தான் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் (Clara Zetkin).

கிளாரா ஜெட்கின்
கிளாரா ஜெட்கின்

அது 1910-ம் ஆண்டு. டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் இரண்டாவது சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு கூடியிருந்தனர். உழைக்கும் பெண்களின் உரிமைகள் குறித்தும், வாக்குரிமை குறித்தும் காரசாரமான விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன.

அப்போது, அரங்கத்தில் ஒரு பெண் கம்பீரமாக எழுந்து நின்றார். அவர்தான் ஜெர்மனியைச் சேர்ந்த சோசலிசப் போராளியான கிளாரா ஜெட்கின். மேடையேறிய அவர், அரங்கமே அதிரும்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்தார்:

“உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், குறிப்பாக பெண்களின் வாக்குரிமையை வலியுறுத்தியும், ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நாளை `சர்வதேச மகளிர் தினமாக’ (International Women’s Day) நாம் அனைவரும் ஒருங்கிணைந்து கடைப்பிடிக்க வேண்டும்!”

கிளாரா ஜெட்கின்
கிளாரா ஜெட்கின்

அவரது குரலில் இருந்த தீர்க்கமும், நியாயமும் அங்கிருந்த அனைவரையும் ஈர்த்தது. 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்களும் கைதட்டி அந்தத் தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அப்படி ஒரு பெண்ணின் சிந்தனையில் உதித்த அந்தத் தீப்பொறிதான், இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் `சர்வதேச மகளிர் தினம்’.

யார் இந்தக் கிளாரா ஜெட்கின்?

1857-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஜெர்மனியில் பிறந்த கிளாரா, அடிப்படையில் ஒரு ஆசிரியை. இளம் வயதிலேயே தொழிலாளர் இயக்கங்கள் மீதும், பெண்கள் உரிமை மீதும் அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. வெறும் மேடைப் பேச்சோடு அவர் நின்றுவிடவில்லை.

`சமத்துவம்’ (Die Gleichheit – Equality) என்ற பத்திரிகையைத் தொடங்கி, சுமார் 25 ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். பெண்களை அரசியல் ரீதியாக விழிப்படையச் செய்ய அந்தப் பத்திரிகையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார்.

கிளாரா ஜெட்கின், ரோசா லக்சம்பர்க்
கிளாரா ஜெட்கின், ரோசா லக்சம்பர்க்

“பொருளாதார சுதந்திரம் இன்றி பெண்களுக்கு முழுமையான விடுதலை இல்லை” என்பதை ஆணித்தரமாக நம்பினார். ஆண்களுக்கு நிகரான ஊதியம், பேறுகால விடுப்பு, வாக்குரிமை ஆகியவற்றுக்காகச் சமரசமின்றிப் போராடினார்.

மற்றொரு மாபெரும் புரட்சியாளரான ரோசா லக்சம்பர்க்கின் நெருங்கிய தோழி கிளாரா. வரலாற்றில் மிகவும் பிரபலமான நட்பு இவர்களுடையது. இருவரும் இணைந்து முதல் உலகப்போருக்கு எதிராக மாபெரும் பிரசாரங்களை முன்னெடுத்தனர். “போர் என்பது ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் வியாபாரம்” என்று துணிச்சலாக முழங்கினர்.

1932-ம் ஆண்டு, ஹிட்லரின் நாசிசம் ஜெர்மனியில் தலைதூக்கிய நேரம். கிளாராவுக்கு அப்போது 75 வயது. வயது முதிர்ச்சியால் கண்பார்வை மங்கி, உடல்நலம் குன்றிய நிலையிலும், ஜெர்மன் நாடாளுமன்றத்தில் நாசிசத்துக்கும் பாசிசத்துக்கும் எதிராக மிகக் கடுமையான ஒரு உரையை நிகழ்த்தினார்.

பாசிசத்தின் ஆபத்தை முன்கூட்டியே எச்சரித்த முதல் குரல்களில் அவரின் குரலும் ஒன்று. நாசிகளின் அச்சுறுத்தலால் பின் சோவியத் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்ட அவர், 1933-ல் தனது 75-வது வயதில் காலமானார்.

கிளாரா ஜெட்கின் சிலை
கிளாரா ஜெட்கின் சிலை

இன்று நாம் சாதாரணமாக அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை, மகப்பேறு விடுப்பு, ஓட்டுப்போடும் உரிமை ஆகியவை எதுவும் சலுகையாக வழங்கப்பட்டவை அல்ல; கிளாரா ஜெட்கின் போன்ற ஆயிரக்கணக்கான போராளிகள் தெருவில் இறங்கிப் போராடிப் பெற்றுத் தந்தவை.

எனவே, இந்த மகளிர் தினத்தில் கிளாரா ஜெட்கின் போன்ற ஆளுமைகளை நினைவுகூர்வோம். அவர் கொளுத்திப் போட்ட உரிமைக்கான நெருப்பை, அடுத்த தலைமுறைக்கும் கடத்துவோம்!

Source link