நமது டில்லி நிருபர்''ஜனாதிபதி திரவுபதி முர்முவை திரிணமுல் காங்கிரஸ் அவமதித்துள்ளது. இது மனதை

நமது டில்லி நிருபர்

”ஜனாதிபதி திரவுபதி முர்முவை திரிணமுல் காங்கிரஸ் அவமதித்துள்ளது. இது மனதை புண்படுத்தியது, வருத்தம் அளிக்கிறது” என டில்லி மெட்ரோ வழிதடத்தை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசினார்.

டில்லியில் இன்று ரூ.18,300 கோடி மதிப்பிலான மெட்ரோ திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர் டில்லி மெட்ரோவின் இரண்டு புதிய வழித்தடங்களை திறந்து வைத்தார். பிறகு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மெட்ரோ விரிவாக்கம் முதல் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கான வீட்டு வசதிகள் வரை பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. ஒரு வருடத்திற்கு முன் டில்லி மக்கள் பாஜவின் இரட்டை இன்ஜின் ஆட்சியை அமைத்தனர்.

பெண் சக்தி

அதன் பலன்கள் இப்போது இங்கு நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் பிரதிபலிக்கின்றன. பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் ஒரு புதிய அத்தியாயம் உருவாக்கப்படுகிறது. முதல்வர் ரேகா குப்தாவின் தலைமையில், தேசிய தலைநகரில் வளர்ச்சி நடைபெற்று வருகிறது. அது அரசியல், நிர்வாகம், அறிவியல், விளையாட்டு அல்லது சமூக சேவை என எதுவாக இருந்தாலும், இந்தியாவின் பெண் சக்தி ஒவ்வொரு துறையிலும் புதிய ஆற்றலுடன் முன்னேறி வருகிறது.

வாழ்த்துக்கள்

மகளிர் தினத்தன்று, நாட்டின் பெண்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கிறேன். அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன். அவர்கள் சமூகத்தையும், தேசத்தையும் வலுப்படுத்துவார்கள். நவீன, வளர்ந்த டில்லியை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உலகில் எவரும் இந்தியா போன்ற பரந்த ஜனநாயகத்தைப் பற்றி நினைக்கும்போதெல்லாம், டில்லியின் பிம்பம் அடிக்கடி நினைவுக்கு வரும்.

அடையாளம்

டில்லி இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்ல; அது நாட்டின் அடையாளமும், இந்தியாவின் சின்னமும் ஆகும். டில்லியின் வளர்ச்சி என்பது ஒரு நகரத்தின் வளர்ச்சி மட்டுமல்ல, அது முழு நாட்டையும் உள்ளடக்கியது. டில்லி எவ்வளவு நவீனமாக மாறுகிறதோ, அவ்வளவு இந்தியாவின் நம்பிக்கை உலகிற்கு முன் பிரதிபலிக்கும். இன்று டில்லி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படையில் வேகமாக முன்னேறி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும். டில்லி மக்களின் வாழ்க்கையை எளிமையை மேம்படுத்தும்.



அக்கறை

பழங்குடி சமூகத்தின் ஒரு பெரிய விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு மேற்கு வங்கத்திற்குச் சென்றார். ஜனாதிபதியையும், பழங்குடி சமூகத்தின் முக்கியமான நிகழ்ச்சியையும் கவுரவிப்பதற்குப் பதிலாக, திரிணமுல் காங்கிரஸ் அந்த நிகழ்வையும் ஜனாதிபதியையும் புறக்கணித்தது. அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர், பழங்குடி சமூகத்தின் வளர்ச்சியில் எப்போதும் அக்கறை காட்டி வருகிறார்.

மனவேதனை

இது ஜனாதிபதிக்கு அவமானம் மட்டுமல்ல, நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகத்தின் மகத்தான மரபுகளுக்கும் அவமானமாகும். இது வேதனையானது மற்றும் மிகவும் வருத்தமளிக்கிறது. இது மனதை புண்படுத்தியுள்ளது. மேலும் இதை நாட்டு மக்கள் மற்றும் டில்லி மக்கள் முன்னிலையில் இன்று தெரிவிக்க விரும்புகிறேன். நாடு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், மேற்கு வங்கத்தில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் அரசு ஜனாதிபதி திரவுபதி முர்முவை கடுமையாக அவமதித்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source link