சென்னை: “மக்களிடம், சினிமாவுக்கும் குடிக்கவும் பணம் இருக்கும்போது, எதற்கு இலவசங்கள் தர வேண்டும்,” என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
கூடுதல் பயம்
கடந்த தேர்தலில் இருந்த கூட்டத்துடன், இருவரை சேர்த்ததால், தி.மு.க.,வுக்கு கூடுதலாக பயம் வந்துவிட்டது என்பது தெரிகிறது.
நல்ல ஆட்சியை கொடுக்கும் கட்சி என்றால், எதற்கு கூட்டணி சேர வேண்டும்? நல்ல ஆட்சி கொடுத்தால், யாரும் தேவையில்லை; ஓட்டுக்கு பணம் தேவையில்லை; குடும்பத் தலைவியருக்கு 5,000 ரூபாய் தரத் தேவையில்லை. 10 பேரை சேர்த்து பெற்ற வெற்றியால் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன?
திராவிட கட்சிகளின் நீட்சி தான் விஜய். அவருக்கென தனித்த தத்துவமோ, பாதையோ கோட்பாடோ கிடையாது.
சினிமா, சித்தாந்தம் இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளக்கூடாது. அவர்கள் அரை சவரன் கொடுத்தனர்; நீங்கள் இப்போது ஒரு சவரன் கொடுக்கிறீர்கள்.
முதல்வர் ஸ்டாலின், 1,000 ரூபாய் கொடுத்தார். பழனிசாமி, நான் வந்தால் 2,000 ரூபாய் என்கிறார்.
திரைப்பட நகைச்சுவை காட்சி போல, 1,000, 2,000, 3,000, 4,000 என சொல்லி, கடைசியில் ‘பிம்பிலிக்கா பிளாப்பி’ என்று தான் ஆகும். அது எப்ப ‘பிளாப்’ ஆகப்போகிறது என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
வாழ்க்கை தரம்
இலவசங்கள் பெற வேண்டிய நிலையில் இருந்து, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன் என்று யாரும் சொல்வதில்லை. சொல்லும் எங்களையும் கவனிப்பதில்லை.
ஒரே நாளில், 760 கோடி ரூபாய்க்கு மேல் குடிக்க, மக்கள் பணம் வைத்திருக்கின்றனர். விஜய் படம் வந்தால், முதல் நாள் முதல் காட்சி, 34 கோடி ரூபாய் வசூலாகிறது.
பொழுதுபோக்கிற்கும், மதுவிற்கும் செலவு செய்ய பணம் வைத்திருப்போருக்கு, எதற்கு இலவசம் கொடுக்கிறீர்கள்.
மக்களின் அறிவை, உடல் ஆற்றலை, உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியை பெருக்கும் நாடு தான் வளரும், உயரும். இவ்வாறு சீமான் கூறினார்.
