புதுடில்லி: குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு அதிக நிதி வழங்க வேண்டும் என, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவரிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
வங்கியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஜூ ஜியாயி, இந்தியா வந்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இவ்வங்கியின் இரண்டாவது பெரிய பங்குதாரராக இந்தியா உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வங்கியின் உறுப்பு நாடுகளாக உள்ள குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு, அதிக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவ வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், இந்தியாவில் ஒரு மண்டல அலுவலகத்தை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி 2016ம் ஆண்டு, 57 உறுப்பினர்களுடன் தனது பயணத்தை துவங்கியது. விரைவாக உலக நாடுகளை ஈர்த்து, 2020ல் 103 உறுப்பினர்களுடன் அபார வளர்ச்சி அடைந்தது. தற்போது இவ்வங்கியின் உறுப்பு நாடுகள், உலக மக்கள் தொகையில் 79 சதவீதத்தையும், உலக ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில், 65 சதவீதத்தையும் கொண்டுள்ளன.
