நமது நிருபர்
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போதைய புவிசார் அரசியல் ரீதியாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் எல்பிஜி விநியோகத்தில் உள்ள தடைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அதிக எல்பிஜி உற்பத்தி செய்ய வேண்டும்.
முக்கியமாக கூடுதலாக உற்பத்தி செய்வதை உள்நாட்டு எல்பிஜி பயன்பாட்டிற்குப் பயன்படுத்த அமைச்சகம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வீடுகளுக்கு உள்நாட்டு எல்பிஜி விநியோகத்திற்கு அமைச்சகம் முன்னுரிமை அளித்துள்ளது. பதுக்கல் மற்றும் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தவிர்க்க 25 நாட்கள் முன்பதிவு காலத்தை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட எல்பிஜியிலிருந்து மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற வீட்டு உபயோகம் அல்லாத துறைகளுக்கு எல்பிஜி விநியோகத்தின் உற்பத்தியை மறுஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
