கரூர் நெரிசல் சம்பவம்: மார்ச் 17ல் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் செந்தில் பாலாஜி

நமது நிருபர்

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் மார்ச் 17ம் தேதி சிபிஐ விசாரணைக்கு செந்தில்பாலாஜி ஆஜராகிறார். அவர் சம்மன் வந்துள்ளது என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்தின் பின்னணியில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் த.வெ.க.,வினர் புகார் அளித்தனர். டில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில், செந்தில் பாலாஜி நேற்று ஆஜராக, ‘சம்மன்’ அனுப்பப்பட்டு இருந்தது.

ஆனால், அந்த சம்மனை, செந்தில் பாலாஜியோ, அவரது அலுவலக ஊழியர்களோ பெறவில்லை. செந்தில் பாலாஜிக்கு ‘இ – மெயில்’ வாயிலாகவும், ‘சம்மன்’ அனுப்பப்பட்டது. அதற்கும், செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. சம்மனை ஏற்று விசாரணைக்கும் ஆஜராகவில்லை. இதனால், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப, சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இன்று (மார்ச் 10) சமூகவலைதளத்தில் சம்மன் வந்துள்ளது என செந்தில்பாலாஜி பதிவிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் மார்ச் 17ம் தேதி நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்க உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Source link