சென்னை: தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது என

சென்னை: தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விற்கின்றன.

தற்போது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. மேற்காசிய நாடுகளில் காணப்படும் போர் பதற்றத்தால், கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நம் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் உணவகங்களுக்கு நேற்று முதல் வணிக காஸ் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. வீடுகளிலும் சிலிண்டர் வினியோகம் செய்வது தாமதமாகி வருகிறது. இதனால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான வீட்டுப்பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தடையின்றி காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்யுமாறு கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு கடிதம்

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி, பிரதமர் மோடிக்கு சென்னை ஹோட்டல் உரிமையாளர் சங்கங்கள் கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஹோட்டல்களுக்கு பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர்கள் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் கல்லூரி விடுதிகள், வெளியூர் பயணிகளுக்கு உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஹோட்டல்களுக்கு தடையூன்றி சிலிண்டர்கள் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source link