நெல்லையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தின் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி லதா. 56 வயதான அவருக்கு கிருஷ்ணவேணி என்ற மகளும், மாயாண்டி என்ற மகனும் உள்ளனர். மாயாண்டி மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. பகலில் தந்தை கண்ணனுக்கு உதவியாக அப்பகுதியில் அவர் நடத்திவரும் இறைச்சிக் கடையில் வேலை செய்துள்ளார்.
வேலை நேரத்திலும் அவர் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்வாராம். சில நாள்களில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புவார் என அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், நேற்று (9-ம் தேதி) அளவுக்கு அதிகமாக மது குடித்த அவர் நள்ளிரவில் வீட்டுக்குச் சென்றுள்ளார். இரவில் உணவு இருக்கிறதா எனக் கேட்டு தாய் லதாவுடன் சண்டையிட்டுள்ளார்.
தாய், மகன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. மது போதை தலைகேறிய நிலையில் இருந்த மாயாண்டி தாய் என்றும் பாராமல் லதாவை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். அதனால் நிலைகுலைந்த லதா வீட்டில் காய்கறி வெட்டப் பயன்படுத்தும் கத்தியை எடுத்து தற்காப்புக்காக மாயாண்டியின் நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளார்.
கத்திக் குத்தில் பலத்தக் காயமடைந்த மாயாண்டி, ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி இன்ஸ்பெக்டர் ராபர்ட் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று லதாவைக் கைது செய்தனர். அத்துடன், மாயாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை அருகே குடிபோதையில் தகராறு செய்து தாக்கிய மகனை பெற்ற தாயே கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
