டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது.
இந்த உலகக்கோப்பை தொடரில் ரன்களைக் குவித்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், “ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே வெஸ்ட் இண்டிஸில் நடந்த உலகக்கோப்பையில் விளையாடிக்கொண்டிருந்தபோதே, இது போன்ற ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நான் சிந்தித்து, கற்பனை செய்து, பயிற்சியும் எடுத்து வந்தேன்.
ஆனால், நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு என் கனவுகள் அனைத்தும் சிதைந்து விட்டதாகவே நினைத்தேன்.
நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு நான் உடைந்து போயிருந்தேன். நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு என்னால் என் படுக்கையை விட்டு நகரக்கூட முடியவில்லை. என்னால் பேட்டிங் செய்ய முடியவில்லை.
நான் முடங்கிபோய் இருந்தேன். நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நான் சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொண்டேன்.
அந்த உண்மையை நான் ஏற்றுக்கொண்டவுடன், என்னால் ஓரளவு விரைவாக மீண்டு வர முடிந்தது. ஜிம்பாப்வே போட்டிக்கு முன்பாக நான் கவுதம் கம்பீரை உடற்பயிற்சிக் கூடத்தில் சந்தித்தேன்.
அப்போது அவர் என்னிடம், ‘சஞ்சு, தயாராக இரு, அடுத்த போட்டியில் நீ விளையாடப் போகிறாய்’ என்று கூறினார். அப்போது என் மனதுக்குள், ‘இப்போது செயலில் காட்டுவோம். இதற்காகத்தான் நான் காத்திருந்தேன்’ என்று சொல்லிக்கொண்டேன்.

அணியில் உள்ள எனது சக வீரர்களுடன் போட்டியிடுவதை நான் விரும்புவதில்லை. நாங்கள் அனைவரும் ஒரு பொதுவான இலக்கிற்காக இணைந்து போராடும்போதுதான், என்னால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது.
நாங்கள் அனைவரும் உலகக்கோப்பை என்ற ஒரே இலக்கிற்காக இணைந்து போராடினோம். இறுதியில் எல்லாம் சுபமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்று சஞ்சு சாம்சன் பேசியிருக்கிறார்.
