புதுடில்லி: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துதல் உள்ளிட்ட ரூ.8.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 6 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ரூ.8.8 லட்சம் கோடி மதிப்பில் மொத்தம் 6 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மதுரையில் உள்ள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதவிர, ஜல் ஜீவன் திட்டத்தை டிசம்பர் 2026ம் ஆண்டு வரை நீட்டித்தல், மேற்கு வங்கத்தில் சந்திரகாச்சி-கராக்பூர் 4வது ரயில்பாதை, சைந்தியா-பாகூர் 3வது பாதை, மத்தியப்பிரதேம் பத்னாவார்-தன்ட்லா-திமர்வானி 4 வழி சாலை ஆகிய திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை;
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்து இருக்கிறது. தென்தமிழகம், முழுவதும் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் இதன் மூலம் அதிகரிக்கும். காலத்தினால் அழியாத கலாசாரம், ஆன்மிக பாரம்பரியத்திற்காக கொண்டாடப்படும் மதுரை, இதன் மூலம் உலகளாவிய இணைப்பை வலுப்படுத்துகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.
இதேபோன்று மற்ற திட்டங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்புதல் பற்றிய விவரங்களை பிரதமர் மோடி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்,. முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கை;
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மதுரை விமான நிலையத்தை ஒரு சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மதுரை விமான நிலையம் சுற்றுலா மற்றும் ஆன்மீகப் பயணங்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது, இதன் மூலம் இப்பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இது பெரும் பங்களிப்பை வழங்குகிறது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்துவது பிராந்திய அளவிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும், வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மற்றும் இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை;
மதுரை விமான நிலையத்தை பெயரளவில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்திய பிரதமர் மோடிக்குத் தமிழக மக்கள் சார்பாக என் மனமார்ந்த நன்றிகள். இதனால் தென் தமிழகத்தின் வளர்ச்சி புதிய மைல் கல்லை தொடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
