டெஹ்ரான்: தோல்வியடைந்த வாக்குறுதிகள் மற்றும் ராணுவ அத்துமீறலில் ஈடுபடும் அமெரிக்கா உடன் பேசும் திட்டம் ஏதும் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்திய மோசமான அனுபவம் எங்களுக்கு உள்ளது. அமெரிக்காவுடன் பேச்சு அல்லது பேச்சுவார்த்தை என்ற கேள்வியோ திட்டமோ எங்களிடம் இல்லை. கடந்த ஆண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், ஜூன் மாதம், பேச்சுவார்த்தைக்கு மத்தியில் எங்களை தாக்கினார்கள்.
இந்தாண்டு அவர்களுடன் பேசினோம். இந்த முறை வேறு மாதரியிருக்கும் என எங்களை நம்ப வைத்தனர். எங்களை தாக்கும் எண்ணம் ஏதும் இல்லை என எங்களிடம் வாக்குறுதி அளித்தனர். ஈரானின் அணுசக்தி பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
அதற்கு நாங்கள் ஒப்புக் கொண்டோம். ஆனால் மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்க குழு பேச்சுவார்த்தையில் இருந்தது. பெரிய முன்னேற்றம் அடைந்துவிட்டோம் என தெரிவித்தனர். ஆனாலும், எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். எனவே இனிமேல், அமெரிக்கா உடன் பேசும் திட்டம் ஏதும் எங்களிடம் இருக்காது என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
