புவனேஸ்வர்: ஒடிஷாவில், நான்கு ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஐந்து பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், அங்கு, 12 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடக்கிறது.
பா.ஜ.,வுக்கு இரண்டு, பிஜு ஜனதா தளத்துக்கு ஒரு சீட் கிடைக்க உள்ள நிலையில், மீதமுள்ள ஒரு சீட்டை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.
ஒடிஷாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு காலியாகும் நான்கு ராஜ்யசபா இடங்கள் உட்பட, நாடு முழுதும் காலியாகும், 37 இடங்களுக்கு வரும் 16ல் தேர்தல் நடக்கிறது.
ஒடிஷா சட்டசபையின் மொத்த பலம், 147. ஒரு ராஜ்யசபா வேட்பாளரை தேர்வு செய்ய குறைந்தது, 30 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் தேவை.
ஆளும் பா.ஜ.,வுக்கு 79 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், இரண்டு இடங்களை அக்கட்சி கைப்பற்றும். அதற்கேற்ற வகையில், மன்மோகன் சமல், சுஜீத் குமார் ஆகியோரை வேட்பாளர்களாக பா.ஜ., நிறுத்தி உள்ளது.
எதிர்க்கட்சியான முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்துக்கு, 48 எம்.எல்.ஏ.,க்களே உள்ளதால், அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா இடமே கிடைக்கும்.
எனினும், கசந்த்ருப்த் மிஸ்ரா, சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் தத்தேஸ்வர் ஹோதா ஆகியோரை அக்கட்சி வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
இதில் ஒருவரே வெற்றி பெற்ற முடியும். அதே சமயம், பிஜு ஜனதா தளத்துக்கு காங்கிரசின், 14 எம்.எல்.ஏ.,க்கள், மார்க்.கம்யூ., – எம்.எல்.ஏ., ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளதால் போட்டி விறுவிறுப்படைந்து உள்ளது. பா.ஜ., ஆதரவுடன், சுயேச்சை வேட்பாளர் திலீப் ரே என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவரை வெற்றி பெற வைக்க திரைமறைவில் பா.ஜ.,வும் காய் நகர்த்தி வருகிறது.
நான்கு ராஜ்யசபா இடங்களுக்கு ஐந்து பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஒடிஷாவில், 12 ஆண்டுகளுக்கு பின், வரும் 16ல் ராஜ்யசபா தேர்தல் நடக்க உள்ளது.
பா.ஜ.,வுக்கு இரண்டு, பிஜு ஜனதா தளத்துக்கு ஒரு சீட் கிடைப்பது உறுதியாகி உள்ள நிலையில், மீதமுள்ள ஒரு சீட்டை யார் கைப்பற்றுவது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
பி ஜு ஜனதா தளத்துக்கு காங்., – இடதுசாரி ஆதரவு அளித்துள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளரை நிறுத்தி, குதிரை பேரத்தில் பா.ஜ., ஈடுபடுவதாக அக்கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
கடைசியாக, 2014ல், ஒடிஷாவில் நான்கு ராஜ்யசபா இடங்களுக்கு ஐந்து பேர் போட்டியிட்ட போது தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக் கது.
