– நமது டில்லி நிருபர் –
லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல் படுவதாகக் கூறி, அவரை பதவியிலிருந்து நீக்கக் கோரி, காங்., – தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, ‘இண்டி’ கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
லோக்சபாவில், இத்தீர்மானம் மீதான விவாதத்தில் பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது: பிரதமராகட்டும், எதிர்க்கட்சித் தலைவராகட்டும், பிற எம்.பி.,க்களாகட்டும், யாராக இருந்தாலுமே சபையில் பேச வேண்டுமெனில், சபாநாயகர் அனுமதி பெற்றாக வேண்டும். அதுகூட ராகுலுக்கு தெரியவில்லை. எங்கள் கூட்டணி எம்.பி.,க்கள், காகிதங்களை கிழித்து, சபாநாயகர் மீது ஒருபோதும் வீசியதில்லை; சபையின் கண்ணியத்தை சீர்குலைத்ததும் இல்லை.
சம்பந்தமில்லாத விஷயத்தை அன்றைய தினம் ராகுல் பேசினார். அதனால் தான் சபாநாயகர் தலையிட வேண்டியதாயிற்று. என் வாழ்நாளிலேயே பார்க்காத ஒரு காட்சியை காண நேர்ந்ததையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். பிரதமர் அவரது இருக்கையில் அமர்ந்திருக்கிறார். ராகுலோ தன் இருக்கையிலிருந்து ஓடி வந்து பிரதமரை கட்டியணைக்கிறார். இன்னொரு எம்.பி.,யைப் பார்த்து, சபையில் அவர் கண்ணடிக்கிறார். இது மாதிரியான எதிர்க்கட்சித் தலைவரை எங்காவது பார்த்தது உண்டா? இவ்வாறு அவர் பேசினார்.
