சென்னை: த.வெ.க., சார்பில் போட்டியிட முதற்கட்டமாக தேர்வான 60 வேட்பாளர்களிடம், அக்கட்சி தலைவர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சட்டசபை தேர்தலுக்காக த.வெ.க., சார்பில் போட்டியிட, பிப்ரவரி மாதம் விருப்ப மனு வழங்கப்பட்டது. ஆனால், எவ்வளவு மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு அளிக்கப்பட்டன என்ற தகவலை, அக்கட்சி இன்னும் வெளியிடவில்லை.
இந்நிலையில், முதற்கட்டமாக சென்னை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட, தேர்வு செய்யப்பட்ட 60 வேட்பாளர்களுடன் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின், விஜய் பேசியதாவது: இனி எனக்கு எல்லாமே அரசியல் தான். குடும்பம், நட்பு என எல்லாவற்றையும் விட்டுவிட்டு தான் முழு நேரமாக அரசியலில் இறங்கி உள்ளேன்.
தேர்தல் எனும் போரில், த.வெ.க.,வின் முன்கள வீரர்கள் நீங்கள்தான். பல்வேறு தகுதி அடிப்படையில், நீங்கள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளீர்கள்.
உங்களின் இடத்துக்கு எவ்வளவு போட்டி இருந்தது என, உங்களுக்கே நன்றாக தெரியும். உங்கள் மீதான நம்பிக்கையில்தான், வேட்பாளராக தேர்வு செய்துள்ளேன். உங்களின் செயல்பாடுதான், த.வெ.க.,வை வெற்றி பெறச் செய்யும்.
த.வெ.க.,வின் தேர்தல் அறிக்கை எல்லா தரப்பிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. அதை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபடுங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இதேபோல, ஆலோசனை கூட்டங்கள் முடிக்கப்பட்டு, வரும் 18ல் வேட்பாளர் பட்டியலை வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளார்.
