சென்னை: ‘கஸ்டம்’ தர வரிசையில் இருந்த, மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்பதல் வழங்கி உள்ளது. இதனால், விமான நிலைய ஆணையம் கட்டுப்பாட்டில், நான்கு சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட மாநிலமாக, தமிழகம் முன்னேறி உள்ளது.
பயணியர் விமான நிலையங்கள், உள்நாடு, சர்வதேசம், கஸ்டம் என, மூன்றாக வகைப்பபடுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில், சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்கள், சர்வதேச விமான நிலையங்களாக இயங்கி வருகின்றன.
மதுரை விமான நிலையம், ‘கஸ்டம்’ எனப்படும் சுங்க வசதி கொண்ட விமான நிலையமாக இயங்கி வந்தது. இங்கிருந்து குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே, விமானங்கள் இயக்கப்பட்டன. மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர், வெளிநாடுகளுக்கு செல்ல, சென்னை அல்லது திருச்சி விமான நிலையங்களையே பெரிதும் நம்பி இருந்தனர்.
எனவே, மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சரவை, மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த, ஒப்புதல் அளித்தது. இதனால், மதுரையில் இருந்து, புதிய சர்வதேச விமான சேவைகள் கணிசமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம் நாட்டில், விமான நிலைய ஆணைய கட்டுப்பாட்டில், நான்கு சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலமாக, தமிழகம் உருவெடுத்துள்ளது. மதுரை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டாலும், விமான நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, புதிய சர்வதேச சேவைகளை அதிகரித்தால் மட்டுமே முன்னேற முடியும் என, ஏவியேஷன் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: ஒரு விமான நிலையத்தின் தரம் உயர்வு என்பது, விமான நிறுவனங்கள் செலுத்தும் கவனத்தில் மட்டுமே உள்ளன. நம் நாட்டில் விமான நிறுவனங்கள், ‘ஹப் அண்ட் ஸ்போக்’ முறையில், விமான இயக்கங்களை செயல்படுத்துகின்றன. விமான நிலைய ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களை விட, தனியார் நிர்வகிக்கும் விமான நிலையங்களுக்கே, விமான நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளன.
இதன் காரணமாக, சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டும், பல விமான நிலையங்கள் முன்னேற முடியாமல் இருக்கின்றன. எனவே, சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்து கிடைத்தாலும், சேவை திட்டமிடல், புதிய வழித்தட கொள்கை ஆகியவற்றில், மதுரைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் ஆகியோர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
