சென்னை: ‘தமிழ் சொந்தங்கள் காட்டிய அன்பை மறக்க முடியாது. தமிழகத்தில் இருந்த நாட்கள் வாழ்வின் பொற்காலம்’ என, கவர்னர் ரவி தெரிவித்து உள்ளார்.
தமிழக கவர்னராக இருந்த ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், வெளியிட்ட அறிக்கை:
கடந்த 54 மாதங்களாக, தமிழ் சொந்தங்களோடு பழகி, அவர்களது அன்பில் திளைத்திருந்தேன். வாழ்க்கையின் ஓட்டத்தில், தமிழக மக்களை விட்டுப் பிரியும் சூழல் வந்துள்ளது. ஆனாலும், தமிழக மக்களோடு செலவிட்ட நாட்கள், என் வாழ்வின் பொற்காலம் என்பதில் சந்தேகமில்லை. தமிழ் குடும்பத்தில் ஒருவனாகவே என்னை உணர்ந்தேன்; இன்றும் உணர்கிறேன்.
வெறும் ஏட்டுக் கல்வியாக இல்லாமல், கல்வியின் துல்லியத்தையும் ஞானத்தையும், தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர். அதை உரிய நேரத்தில் வெளிப்படுத்தவும் செய்கின்றனர்.
இந்தியாவில் யாரும் ராமர், கிருஷ்ணரின் செல்வாக்கு இல்லாமல் இருக்க முடியாது. சிறு வயதிலிருந்தே பகவத் கீதையையும், துளிதாசரின் ராமாயணத்தையும் பயின்ற எனக்கு, கம்பரின் காவியம், மேலும் விசாலமான பார்வையை அருளியது.
தமிழகத்தின் சிறப்புகளில் ஆகச்சிறந்த சிறப்பு, கோவில்கள். சிதம்பரம் நடராஜரும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரும், தமிழன்னையின், தமிழக மக்களின் குடும்ப உறுப்பினர்கள்.
தமிழ் இலக்கியங்கள் பாரத நாட்டை குறிப்பிடும்போது, ‘நாவலந்தீவு’ எனும் பெயரைப் பயன்படுத்துகின்றன. நிலவியல் ஆய்வுகளின்படி, இந்திய தீபகற்பத்தை இப்பெயரோடு பொருத்தலாம். மருது சகோதரர்கள், ‘ஜம்புத்தீவு பிரகடனம்’ என்றே குறிப்பிட்டுள்ளனர்.
தமிழக மக்கள் காட்டிய அன்பை விவரிக்க, வார்த்தைகள் போதாது. என் நன்றியை சொல்லவும் வார்த்தைகள் போதாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
