ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அரசு மகளிர் இலவச டவுன் பஸ்சில் பயணிக்கும் வடமாநில பெண் பக்தர்களிடம் கண்டக்டர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர்.
தமிழகத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டம் நடைமுறையில் உள்ளது.
ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் வரும் வடமாநில பக்தர்கள், பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கி அரசு பஸ்சில் ராமநாத சுவாமி கோயிலுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் அரசு பஸ் கண்டக்டர்கள் வடமாநில பெண் பக்தர்களிடம் கட்டணம் பெற்று டிக்கெட் வழங்குகின்றனர். பெண்களுக்கு இலவசம் தானே என கேட்டால் அது தமிழக பெண்களுக்கு மட்டும் தான் எனக் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் இந்திய கம்யூ., நகர செயலாளர் செந்தில் கூறியதாவது: அரசு டவுன் பஸ்சில் தினமும் ஏராளமான வடமாநில பெண் பக்தர்கள் பயணிக்கின்றனர். இவர்களிடம் கண்டக்டர்கள் டிக்கெட் கட்டணம் வசூலிப்பது வேதனைக் குரியது. இலவச பயணம் இவர்களுக்கு பொருந்தாதா. இதில் நடவடிக்கை எடுக்கக்கோரி உயரதிகாரிகளிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.
ராமேஸ்வரம் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் அறிவரசன் கூறுகையில், ‛நான் இங்கு பணியில் சேர்ந்து இரு நாட்கள் தான் ஆகிறது. முன்பு வட மாநில பெண்களிடம் கட்டணம் வசூலித்தனரா என தெரியவில்லை. தற்போது கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளேன்,’ என்றார்.
