வ ணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால், ஹோட்டல் துறையில் பதற்றம் நிலவுகிறது. இதன் எதிரொலியாக, நேற்று பங்குச்சந்தை வர்த்தகத்தில், உணவகங்கள் மற்றும் ஆன்லைன் உணவு டெலிவரி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
பெங்களூரு, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் உணவகங்களுக்கு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய உணவகங்கள் சங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.
தற்போது பல உணவகங்களில் ஒரு வாரத்துக்கு மட்டுமே எல்.பி.ஜி., இருப்பு உள்ளதாகவும், வினியோகத்தில் பாதிப்பு நீடித்தால் சில உணவகங்கள் செயல்பாடுகளை குறைக்க அல்லது தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால் உணவு டெலிவரி ஆர்டர்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.
எனவே, உணவகங்களையும், டெலிவரி தளங்களையும் இயக்கும் நிறுவனங்களின் பங்குகள், குறுகிய காலத்தில் விற்பனை அழுத்தத்தை சந்திக்கலாம் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
