சென்னை: ‘இந்தியாவில், பொறியியல் அல்லது மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்காக மட்டுமே கல்வி பார்க்கப்படுகிறது; இத்தகைய பயங்கரமான பந்தயத்தில், தங்கள் குழந்தைகளை பெற்றோர் ஓட வைக்கின்றனர்’ என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தாம்பரம் சானடோரியம் பகுதியைச் சேர்ந்த ஷாஜிமோன் என்பவர், பிளஸ் 2 வகுப்பில், தன் மகளுக்கு கணிதப் பாடத்தை கூடுதலாக எழுத, சி.பி.எஸ்.இ., அனுமதி மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு: உலகம் முழுதும் கல்வி என்பது கற்றல் என்கிற ரீதியில் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் கல்வி என்பது மருத்துவம் அல்லது பொறியியல் சேர்க்கைக்காக மட்டுமே பார்க்கப்படுகிறது.
இத்தகைய பயங்கரமான பந்தயத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஓட வைக்கின்றனர். உயர் நிலைப் பள்ளியில், மற்ற எளிதான பாடங்களை எடுக்க, தாய்மொழி கூட தியாகம் செய்யப்படுகிறது. இதுபோன்ற பைத்தியக்காரத்தனத்தில், எளிதானது என நினைக்கும் பாடங்களை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக, எல்லா வகையான பாடங்களும் மாறுகின்றன.
இயற்பியல், வேதியியல், உயிரியியல் ஆகிய மூன்று பாடங்களை மட்டும் படித்தால், ‘நீட்’ தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று, தங்கள் குழந்தைகள் வெற்றி பெறுவர் என நினைத்து, இதை கடைபிடிக்கின்றனர். ஆனால், அதுபோல நடப்பதில்லை.
மனுதாரரின் மகளை கணித பாடத்தை கூடுதல் பாடமாக தேர்வெழுத, மத்திய இடைநிலை கல்வி வாரியம் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
