தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, மதுரையில் உள்ள நூற்றுக்கணக்கான உணவகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் துணைத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார் கூறியதாவது, “வணிக பயன்பாட்டிற்கான கமர்சியல் சிலிண்டர்கள் போதிய அளவில் விநியோகிக்கப்படாததால் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் டீலர்களுக்கு கமர்சியல் சிலிண்டர் வழங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், உணவகங்களுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 2,000க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர்கள் தற்போது கள்ளச் சந்தையில் 3,000 வரை விற்கப்படுகிறது. சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக தோசை, இட்லி போன்ற அத்தியாவசிய உணவுகளின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகும். இது பொதுமக்களை நேரடியாக பாதிக்கும்.

மதுரையில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல், மதுரையின் அடையாளமாக விளங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்களும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
