புதுடில்லி: 13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்து

புதுடில்லி: 13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்து உள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் ராணா,32. கடந்த 2013ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, சண்டிகரில் உள்ள தங்கும் விடுதியின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். அப்போது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சுயநினைவை இழந்து கோமாவுக்கு சென்றார்.

படுத்த படுக்கையாக இருக்கும் அவருக்கு பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர் குணமடைய வாய்ப்பு இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையும் உறுதிப்படுத்தி விட்டது.

இதையடுத்து, தனது மகனை மறைமுக கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி ஹரிஷ் ராணாவின் தந்தை அசோக் ராணா சுப்ரீம்கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். கடந்த ஜனவரி மாதம் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

அனுமதி

இந்நிலையில் இன்று (மார்ச் 11) , 13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞர் ஹரிஷ் ராணாவை கருணைக்கொலை செய்ய நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு அனுமதி அளித்து உள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நோயாளிக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை நிறுத்தப்பட வேண்டும்.

இதற்காக, நோயாளியை எய்ம்ஸ் மருத்துவமனையின் நோய்த்தடுப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்க வேண்டும். நோயாளியை அவரது இல்லத்திலிருந்து சிகிச்சை மையத்திற்கு மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எய்ம்ஸ் நிர்வாகம் செய்து தர வேண்டும், எனக் கூறியுள்ளனர்.

ஏற்கனவே 2018 மற்றும் 2023ம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தால் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 3வது முறையாக கடந்த ஜனவரி மாதம் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்று, இந்தியாவில் கருணைக் கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி அளிப்பது இதுவே முதல்முறையாகும்.

Source link