டெஹ்ரான்; போர் தொடங்கிய காலத்தில் இருந்து கிட்டத்தட்ட 11 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய்யை

டெஹ்ரான்; போர் தொடங்கிய காலத்தில் இருந்து கிட்டத்தட்ட 11 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய்யை ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக சீனாவுக்கு ஈரான் அனுப்பி உள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் நாட்கள் நகர, நகர தீவிரம் அடைந்து வருகிறது. சரண் அடைவதே தீர்வாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துவிட்டாலும் அதற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாமல் போரிட்டு வருகிறது.

வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து மீண்டும் தாக்க ஆரம்பித்து வருகிறது. போர் தீவிரம் அடைந்து வரும் சூழலில், உலகின் பெரும் பகுதிக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது.

இதன் காரணமாக, வர்த்தக் கப்பல் போக்குவரத்து முடங்கி கச்சா எண்ணெய் வினியோகம் உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க அளவு முடங்கி இருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 120 அமெரிக்க டாலர்களை கடந்துவிட்டது.

இந் நிலையில், போர் தொடங்கிய பிப்.28ம் தேதியில் இருந்து கிட்டத்தட்ட 11.7 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய்யை ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக சீனாவுக்கு ஈரான் அனுப்பி உள்ளது. இந்த விபரத்தை டேங்கர் டிராக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் சமீர் மதானி வெளியிட்டுள்ளார். (டேங்கர் டிராக்கர்ஸ் என்ற நிறுவனம் கச்சா எண்ணெய் ஏற்றுமதிகளை செயற்கைகோள் மூலமாக கண்காணிக்கும் ஒரு கடல்சார் புலனாய்வு நிறுவனம் ஆகும்).

இதேபோன்று கெப்ளர் எனப்படும் கப்பல் புலனாய்வு நிறுவனம், ஈரானில் இருந்து சீனாவுக்கு சுமார் 12 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களை ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக, ஈரானின் கச்சா எண்ணெய்யை அதிகளவு வாங்கும் நாடாக சீனா இருக்கிறது என்றும் கெப்ளர் நிறுவனம் கூறி உள்ளது.

Source link