கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்துள்ளது. இதை அறியாமல் உணவருந்திய மாணவ, மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 43 மாணவ, மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 30 மாணவர்கள், 13 மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் உண்டாகியுள்ளது. இதனால் பெரும் பதற்றமானது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு மாணவ, மாணவிகளின் உடல்நலம் சீரானது. நேற்று இரவு அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டியதற்கு பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அளித்துள்ள விளக்கத்தில், “இது குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இனி இது போன்ற சம்பவம் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்” என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அளித்துள்ள விளக்கத்தில், “அரசு பள்ளிகளில் உள்ள சமையல் அறைகள் மற்றும் வளாகம் முழுவதும் சுத்தம் செய்வதற்கும், உணவு பொருட்களையும் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
