மும்பை: மும்பையில் ராஜூ பி.புத்ரன் தொடங்கிய சரஸ்வதி பவுண்டேஷன், ஏழை எளிய மக்கள் வாழ்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் சாதாரண குடும்பத்தில் நான்கு குழந்தைகளில் இளையவராக பிறந்தவர் ராஜூ பி.புத்ரன். ஷிர்வா பகுதியில் பள்ளிக்கல்வி படித்த அவர், சிறு வயதிலேயே மும்பைக்கு சென்றார்.
அங்குள்ள அன்னை மேரி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். பொருளாதார சிரமத்தால் மேற்கல்வி படிக்க முடியவில்லை. ஹோட்டல் துறையில் வேலை பார்க்கத் தொடங்கிய அவர், பல்வேறு ஹோட்டல்களையும், கேண்டீன்களையும் நிர்வகிக்கும் பணியை சிறப்பாக செய்தார்.
இப்படி சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கை, மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில், 2012ல் சரஸ்வதி பவுண்டேஷன் அமைப்பை தொடங்கினார்.
அதன் மூலம், விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். கல்வி, நல உதவி, சமுதாய மேம்பாடு என அவரது பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.
ஏழை, எளிய மக்கள் வாழ்வில் மேம்பட உதவும் வகையில், ஸ்காலர்ஷிப், மருத்துவ உதவி, வேலைவாய்ப்பு உதவி, மறுவாழ்வு உதவிகளை வழங்கினார். முதியோர் இல்லம், அனாதை இல்லங்களுக்கும் உதவிகளை வழங்கினார்.
ஓரியண்ட் இன்ஸ்டிட்யூட் உடன் இணைந்து மாணவர்களுக்கு 50 சதவீதம் சலுகை கட்டணத்தில் கல்வி அளிக்க ஏற்பாடு செய்தார். அங்குள்ள விஷ்ணுமூர்த்தி கோவிலை சிறப்பான முறையில் புனரமைத்து திறக்கச்செய்தார்.
இது மட்டுமின்றி, யோகா மற்றும் நல்வாழ்வு திட்டங்களையும் சரஸ்வதி பவுண்டேஷன் செய்கிறது. இந்த அமைப்பின் வெற்றியானது, அர்ப்பணிப்புடன் செயல்படும் தன்னார்வலர்கள் குழுவினரால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது என்றால் அது மிகையில்லை.
