சென்னை : திருச்சி பஞ்சப்பூரில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாய கூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி

சென்னை : திருச்சி பஞ்சப்பூரில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாய கூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் பேசியதாவது:

அ.தி.மு.க, பொதுச் செயலர் இபிஎஸ் பேசியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கூட்டணி. தி.மு.க., அமைத்துள்ள கூட்டணி, பல்வேறு பிரச்னைகள் நிறைந்தது. பல்வேறு வார்த்தை போர்களுக்கு இடையே, தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. ஆட்சியில் பங்கு கேட்ட காங்கிரசிடம் கெஞ்சி, அக்கட்சிக்கு அடிமையாகி, தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், நாங்கள் பரஸ்பர உணர்வுடன் இணைந்துள்ளோம்.

தி.மு.க, தேர்தல் வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் வந்தால், தி.மு.க.,வில் இருந்து அறிவிப்பு வரும். தேர்தல் முடிந்தால், அதை மறந்து விடுவர். இது தான், தி.மு.க.வின் கொள்கை. அ.தி.மு.க.,வும், எங்கள் கூட்டணியும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம். முதல்வர் ஸ்டாலின், வரும் தேர்தல், தமிழகத்துக்கும், டில்லிக்குமான தேர்தல் என்கிறார்; இது, தமிழக சட்டசபை தேர்தல். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள், தொடர்ந்து அரங்கேறி வருகின்றன். மோசமான தி.மு.க. ஆட்சியை அகற்றுவது தான் எங்கள் நோக்கம். தி.மு.க., என்பது குடும்ப கட்சி. இந்த தேர்தல் கருணாநிதி குடும்பத்துக்கு, இறுதி கட்ட தேர்தலாக அமையும்.

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்

திருச்சியில் சமீபத்தில், தி.மு.க., மாநாடு நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ‘இந்த தேர்தல், தமிழகத்துக்கும், டில்லிக்குமான தேர்தல்’ என்றார்; இது, ஒரு குடும்பத்தின் ஆட்சிக்கும், தமிழக மக்களுக்கான தேர்தல். குடும்ப ஆட்சியை முடிவு கட்டும் தேர்தல். பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் வரும்போதெல்லாம், தாய் மாமன் சீர் கொண்டு வருவதுபோல், பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார். தற்போது, 5,600 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார்.

அ.ம.மு.க, பொதுச் செயலர் தினகரன்

முதல்வர் ஸ்டாலின், அனைத்து கூட்டங்களிலும், தமிழகத்துக்கும், டில்லிக்குமான தேர்தல் என்கிறார். பிரதமர் மோடி, டில்லியில் இருந்துதான், ஆட்சி செய்ய முடியும். சென்னையில் இருந்து ஆட்சி செய்ய முடியாது; இது, முதல்வருக்கு தெரியாதா அல்லது பயத்தில் பேசுகிறாரா. பிரதமர் மோடி டில்லியில் இருந்து ஆட்சி செய்தாலும், அவர் குஜராத்தை சேர்ந்தவர். குஜராத்தில், 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, திராவிடர் ஆட்சி இருந்தது. ‘துவாரகா’ என்ற பகுதியே, நம் சங்க இலக்கியங்களில், துவரை என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. அந்த துவரையை, தமிழ் பேசும் வேளீர்கள் ஆட்சி செய்தனர். அப்படிப்பட்ட குஜராத்துக்கு, தலைமை தாங்கியவர், ‘துவரை கோமானாக’ தமிழகம் வந்துள்ளார். தமிழகத்துக்கும், மோடிக்குமான உறவு, தொப்புள் கொடி உறவு போன்றது.

பா.ம.க., தலைவர் அன்புமணி:

தமிழகத்தில், தி.மு.க., ஏன் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை மக்கள் உணர வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில், தமிழகத்தில், 8,752 கொலைகள் நடந்துள்ளன. அதில், 1,977 பெண்கள்; 361 குழந்தைகள். 38 பெண் குழந்தைகள், பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில், அதிக கொலைகள் நடந்த மாநிலம் தமிழகம்.இந்தியாவில் அதிக மது விற்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மதுவால், பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது குறித்து முதல்வருக்கு கவலை கிடையாது. எனவே, தி.மு.க., ஆட்சியை அகற்ற உறுதியேற்போம்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

Source link